ஓபிஎஸ், இபிஎஸ்ஸை நேரில் சந்திப்பேன்.. எம்ஜிஆர் பிறந்த நாளில் சசிகலா போட்ட குண்டால் அதிரும் அதிமுக!
சென்னை: அதிமுகவை ஒன்றிணைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விரைவில் நேரில் சந்திப்பேன் என சசிகலா அறிவித்திருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் சசிகலா தன்னை பொதுச்செயலாளர் என அறிவித்து கொள்கிறார்; எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக பிரகடனம் செய்து கொண்டார்; ஓபிஎஸ்ஸோ ஒருங்கிணைப்பாளரே நான் தான் என்கிறார்.
அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் பிப்ரவரி மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இவ்வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் பதில் மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை வழக்கம் போல அதிமுக கோஷ்டிகள், தனித்தனியே இன்று கொண்டாடின. சென்னை தியாகராயர் நகர் இல்லத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை சசிகலா கடைபிடித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். திமுகவை வீழ்த்த அதிமுகவினரிடம் ஒற்றுமை அவசியம். ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரை விரைவில் சந்திக்க இருக்கிறேன் என்றார்.
ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில் சசிகலாவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்த்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் இணைந்திருப்பதால் தேவர் ஜாதி வாக்குகளைக் கொண்ட பிரிவாக அதிமுகவின் ஓபிஎஸ்- சசிகலா கோஷ்டி உள்ளது. இபிஎஸ் தரப்பு, இருவரையும் ஏற்க மறுக்கிறது. அதனால் கவுண்டர் ஜாதி வாக்குகளை அதிகம் கொண்ட பிரிவாக இபிஎஸ் அணி உள்ளது.
அதிமுகவின் அனைத்து கோஷ்டிகளையும் ஒருங்கிணைக்க பாஜக பகீரத முயற்சி மேற்கொண்டது. ஆனாலும் அதிமுகவின் ஒவ்வொரு கோஷ்டியும் ஆளுக்கு ஒரு திசையில் உறுதியாக இருக்கின்றனர். இதனால் விரைவில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்திக்கப் போவதாக சசிகலா அறிவித்துள்ளார். சசிகலாவின் இந்த அறிவிப்பு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவை சந்திக்க ஓபிஎஸ் ஒப்புக் கொள்ள சாத்தியங்கள் உண்டு. ஆனால் இபிஎஸ் சந்திக்க மறுப்பார் என்றே தெரிகிறது. டெல்லி மேலிடம் நெருக்கடி கொடுத்தாலும் சசிகலாவை சந்திக்க இபிஎஸ் ஓகே சொல்வாரா? இல்லையா? என்பதுதான் அதிமுகவில் நடக்கும் ஹைலட்டான விவாதம்.