விருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு
ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிபேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிபேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1756 ஆக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 53 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2394 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 98 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 29 பேர் கொரோனா தொற்றால் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,995 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, 21,521 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்த போது மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. கடந்த ஜூலை 9ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.












Click it and Unblock the Notifications