வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் நாவலுக்கு மலேசிய அறக்கட்டளையின் சிறந்த உலகத் தமிழ் நாவல் விருது!
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப் போர் எனும் நாவல் மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையின் சிறந்த 'உலகத் தமிழ் நாவல்' பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ 7.51 லட்சம்) வழங்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுத வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது முதல் கவிதை நூலான வைகறை மேகங்கள் கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972 இல் வெளிவந்தது.

அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவர். இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களையும் எழுதியிருக்கிறார். இந்த ஆண்டும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அவரது புத்தகங்கள் இடம்பெறுகின்றன. அதற்கு சிறப்பு சலுகைகளும் சுவாரஸ்யமான அனுபவங்களும் காத்திருக்கின்றன.

திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசிய கீதம், கவிராஜன் கதை, இதுவரை நான் (வைரமுத்து முதல் சுயசரிதை), என் பழைய பனை ஓலைகள், வானம் தொட்டுவிடும் தூரம்தான், என் ஜன்னலின் வழியே, மௌனத்தின் சப்தங்கள், கல்வெட்டுக்கள், கொடிமரத்தின் வேர்கள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு எழுதிய மூன்றாம் உலகப் போர் என்ற நாவலுக்கு மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையின் சிறந்த 'உலகத் தமிழ் நாவல்' பரிசு கிடைத்துள்ளது (10ஆயிரம் அமெரிக்க டாலர்). இந்த நாவலின் சுருக்கம்- இப்போது ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்;
ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராக தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர். அதாவது புவிவெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரு பெரிய வினாக்களுக்கிடையே ஓர் இந்திய உழவனின் வாழ்வியல் குறித்து உள்ளூர் மொழியில் எழுதப்பட்ட உலக நாவல்.
இந்த புத்தகம் சுமார் 399 பக்கங்களை கொண்டுள்ளது. "பெரும்பாலும் மேட்டுக்குடி மக்கள் மதுவை அருந்துகிறார்கள். ஆனால் உனைக்கும் மக்களை, மது அருந்துகிறது. மேல்தட்டு மக்களின் உபரிப் பணத்தில் கை வைக்கும் மது அடித்தட்டு மக்களின் உணவுப் பணத்திலேயே கை வைக்கிறது" என அந்த புத்தகத்தில் அத்தியாயம் 14 இல் ஓர் உன்னதமான கருத்தை தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து எழுதிய புத்தகங்கள் குறித்த விவரங்களை அறிய http://www.vairamuthu.in/vm50 என்ற இணையதளத்தை பார்க்கவும்.












Click it and Unblock the Notifications