"இத்தனை பேர்" தடுப்பூசி போட்டாலே.. கொரோனா பாதிப்பு பெரியளவில் இருக்காது.. மா. சு மகிழ்ச்சி தகவல்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சி செல்லாண்டிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அந்த திட்டத்தை ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில் தமிழகத்தில் நடந்த 5ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சதவீதம் மேலும் 2 சதவீதம் உயரும்.

கொரோனா பாதிப்பு
70 சதவீதத்திற்கு மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 1.50 லட்சம் பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. மொத்த பரிசோதனையில் 0.80 சதவீதம். அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி தெலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 8.53 லட்சம் பேர். இதில் 6.22 லட்சம் பேர் என 73 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் கரூர் உள்ளது.

18 வயதுக்குள்பட்டவர்கள்
18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கான தடுப்பூசி பரிசோதனையில் உள்ளது. இந்த தடுப்பூசியின் சோதனை ஓட்டம் தொடங்கினால் அதை செயல்படுத்துவதிலும் தமிழகம் முதலிடத்தில் இருக்கும் என்றார். நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுவதை பார்வையிட்டு பயனாளிகளுக்கு இரு மாதங்களுக்கான மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.

இரண்டாவது அலை
கொரோனா இரண்டாவது அலையை காட்டிலும் 3ஆவது அலையில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்கள். கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. நேற்று தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. அது போல் சென்னையில் 1600 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் லட்சக்கணக்கான கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன. கொரோனா சங்கிலியை உடைக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications