செக்யூரிட்டியே வேண்டாம்.. மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..என்னாச்சு?
சென்னை: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் சிஇஓவான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்துடன் சுற்றி பார்க்க வந்தார். இந்த வேளையில் செக்யூரிட்டி எதுவும் வேண்டாம் எனக்கூறி மக்களோடு மக்களாக சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள பல்லவர் கால கோவில், சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
மேலும் கோவில்களில் உள்ள சிற்பங்கள் கலை நயத்துடன், மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாமல்லபுர நினைவு சின்னங்களை உலகப் பண்பாட்டு சின்னம் என யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
தம்பி அன்பில் மகேஷுக்கு அண்ணன் அன்பாக கோரிக்கை வைக்கிறேன்.. ஆசிரியர்களை சந்தித்த பின் சீமான் பேட்டி
சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
இதனால் ஆண்டுதோறும் மாமல்லபுரம் வரும் உள்நாடு, வெளிநாடு பயணிகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019ல் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் தான் நடந்தது. அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியும் மாமல்லபுரத்தில் தான் நடந்தது. இதில் ஏராளமான வெளிநாட்டினர் பங்கேற்றனர். இதனால் தற்போது மாமல்லபுரத்துக்கு இன்னும் அதிகமானவர்கள் வந்து செல்கின்றனர்.
சிவராஜ் சிங் சவுகான்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை மாமல்லபுரம் வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து சென்றார். முகத்தில் மாஸ்க், கண்களில் கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து தனது அடையாளத்தை மறைத்து அவர் ரகசியமாக வந்து மாமல்லபுரத்தை சுற்றி பார்த்து சென்றார். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது மத்திய பிரதேச முதல் அமைச்சர்(பாஜக) சிவராஜ் சிங் சவுகான் நேற்று குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார்.
பாதுகாப்பு வேண்டாம்..
மாமல்லபுரம் வந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் வரவேற்றார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சிவராஜ் சிங் சவுகான் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க தொடங்கினார். இந்த வேளையில் அவருடன் போலீசார் சென்றனர். இதையடுத்து சிவராஜ் சிங் சவுகான் போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து நான் தனியாக சுற்றி பார்க்கிறேன். பாதுகாப்பு என்பது வேண்டாம் எனக்கூறினார்.
தனியாக சுற்றிய முதல்வர்
இதையடுத்து மத்திய பிரதேச முதல்வர் என்பதை காட்டி கொள்ளாமல் சிவராஜ் சிங் சவுகான் மக்களோடு மக்களாக பல்வேறு இடங்களை குடும்பத்தினருடன் சுற்றி பார்த்தார். மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலை ரசித்தார். சுற்றுலா வழிகாட்டி காதர்பாஷா அதன் சிறப்புகளை விபரமாக எடுத்து கூறினார்.
மக்களுடன் போட்டோ
அதன்பிறகு கடற்கரை கோவிலின் சிற்பங்களின் முன்பு நின்று சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தினருடன் போட்டோ எடுத்து கொண்டார். இதையடுத்து அங்கு இருந்த சில சுற்றுலா பயணிகள் சிவராஜ் சிங் சவுகானை அடையாளம் கண்டனர். இதையடுத்து அவர்கள் சிவராஜ் சிங் சவுகானுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டனர்.