திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் வருடம் மார்ச் 29-ந் தேதி திருச்சியில் நடைபயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக டிஜிபிக்கு அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி வி. பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிறப்பு புலனாய்வு குழு
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரானா மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ,சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்று தெரிவித்திருந்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி பாரதிதாசன், கடந்த 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ காவல்துறைகள் விசாரணை நடத்தியும், கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என்பதால், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன் மற்றும் சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும்; அடுத்தக்கட்ட விசாராணையை சிறப்பு குழு புலனாய்வு தொடர வேண்டும் என உத்தரவிடுள்ளார். சிபிசிஐடி உயர் அதிகாரி சகீல் அக்தர் இந்த விசாரணையை கண்காணிக்க வேண்டும் எனவும், அதை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டதுடன், 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பாரதிதாசன்.

விரைவில் விசாரணை
இந்த கொலை வழக்கு விசாரணை முடியும்வரை சிபிஐ அதிகாரி ரவிக்கு வேறு பணிகளை ஒதுக்கக்கூடாது என சிபிஐ-க்கும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பாரதிதாசன். சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை கூடிய விரைவில் தொடங்க வேண்டும்; பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் தொடங்கினால் நல்லது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி பாரதிதாசன். சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 7-ந் தேதி ஒத்திவைத்தார் நீதிபதி பாரதிதாசன்.












Click it and Unblock the Notifications