கொரோனா வதந்தி: மாணவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து - ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தனியார் தொலைக்காட்சி லோகோவை பயன்படுத்தி கொரனா வைரஸ் தொடர்பாக வதந்தி குற்றத்திற்காக மாணவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சைபர் குற்றத்தின் கீழ் வரவில்லை என்றும் குண்டர் சட்டத்தில் அடைக்க பட்டவர்கள் மாணவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டும் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தில் கொரோனா வைரஸ் குறித்து தனியார் தொலைக்காட்சியின் லோகோவை பயன்படுத்தி சுமார் 24 பேருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பியதாக துக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரம்ப சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பங்களாப்புதூர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவர் கார்த்திகேயன் மற்றும் ஒருவரை கடந்த மார்ச் மாதம் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 17 வயது மாணவர் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கூடத்திலும், 19 வயது மாணவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 19 வயது மாணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் 19 வயது மாணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து 3 தமிழக அமைச்சர்களுக்கு கொரோனா.. மூடப்பட்டது தலைமைச்செயலகம்.. தடுப்பு பணி தீவிரம்!
இதுதொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்ய கோரி கார்த்திகேயனும் மற்றொரு மாணவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இது சைபர் குற்றத்தின் கீழ் வரவில்லை என தெரிவித்தும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் மாணவர்கள் என்று கருத்தில் கொண்டும் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்