எஸ்.சி/எஸ்டி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம்.. பிரபல கல்லூரிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி பழங்குடியின, பட்டியலின மாணவர்களிடம் வசூலித்த விண்ணப்பக் கட்டணத்தைத் திருப்பி செலுத்திவிட்டதாகச் சென்னை குரு நானக் கல்லூரி அளித்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவுகளுக்கு முரணாகச் சென்னை வேளச்சேரி குரு நானக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கும்போது, பட்டியலின பழங்குடியின மாணவர்களிடமும் இளநிலை படிப்புகளுக்கு 300 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 500 ரூபாயும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கில் குரு நானக் கல்லூரி அளித்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அரசாணைகள் பிறப்பித்துள்ள நிலையில், அதை மீறும் வகையில் குரு நானக் கல்லூரியில் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே. கண்ணையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கல்லூரி விளக்கம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.காஞ்சனா, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், குரு நானக் கல்லூரி தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் சேஷாத்திரி ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது குரு நானக் கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக் சேஷாத்திரி, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு விளக்கம்
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிளீடர் பி.முத்துக்குமார், விண்ணப்பக் கட்டணத்தை எவ்வாறு வசூலிப்பது, கூடுதலாக வசூலித்த தொகையைத் திருப்பி செலுத்துவது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் மூலம் அனைத்து மண்டல இணை இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அனைத்து மண்டலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

வழக்கு முடித்து வைப்பு
மேலும் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தையும், பிற மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தையும் கல்லூரிகள் திருப்பி செலுத்தி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, குரு நானக் கல்லூரிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications