கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி.. "வகுப்புகளை தொடங்கலாம்" - உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை: மாணவி ஸ்ரீமதி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உரிய பாதுகாப்புடன் பள்ளியை திறக்குமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அப்பள்ளி விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நெருங்கும் சூழலில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உடனே மாத்துங்க.. செக் பண்ண மாட்டீங்களா? ரெய்டு விட்ட டெல்லி.. பாஜகவிற்குள் நடந்த பரபர சம்பவம்!
மரணம் - கலவரம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற ப்ளஸ் டூ மாணவி கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோரும், ஊர் மக்களும் பள்ளி நிர்வாகத்தை அணுகினர். ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஜூலை 17-ம் தேதியன்று பள்ளி வளாகத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், பள்ளி பஸ்கள், உடைமைகள் சூறையாடப்பட்டன. பல பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.
பள்ளி நிர்வாகம் மனு
இதனிடையே, பள்ளி இவ்வாறு காலவரையின்றி மூடப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் தரப்பிலும், ஊர் மக்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரும், பள்ளியை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதே சமயத்தில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்து முடித்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
"பள்ளியை தொடங்க தயார்"
இந்த மனுவானது, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், "ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளி வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன" என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த பள்ளி தயாராக உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தார்.
நேரடி வகுப்புகளுக்கு அனுமதி..
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான ஒரு மாதக்காலத்திற்கு நேரடியாக வகுப்புகளை தொடங்கலாம் என உத்தரவிட்டார். அதன் பின்னர், நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் மனு அளிக்கலாம் என பள்ளிக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மற்றும் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (நவ. 21) ஒத்திவைத்தார்.