கட்டாய ஹெல்மட், டிக்டாக், ரம்மிக்கு தடை: மக்கள் நலன் தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி கிருபாகரன் ஓய்வு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.கிருபாகரன் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பிரிவு உபச்சார உரை நிகழ்த்திய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், நீதி வழங்குவதிலும், இளம் வழக்கறிஞர்களுக்கும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர் என்றும், மக்கள் நீதிபதி என அழைக்கப்படும் நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெறுவது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கட்டாய ஹெல்மெட் உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும், நளினி, முருகன் ஆகியோரை உறவினர்களுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்க உத்தரவு பிறப்பித்து மனிதநேய உறுதி செய்தார் என்றும் குறிப்பிட்டார்.

கண்கலங்கினார்
பதிலுரை ஆற்றிய நீதிபதி என்.கிருபாகரன், தாய் - தந்தை, ஆசான்களை நினைவு கூர்ந்த போது கண்கலங்கினார். ஒரு போதும் தன்னை நீதிபதியாக நினைத்து கொண்டதில்லை. சாதாரண நபராகவே இருந்தேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்ததே இல்லை . தூக்கத்திலும் வழக்கை நடத்தி, உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருப்பேன் என மனைவி கூறுவார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
என்னுடைய வளர்ச்சி மற்றும் இக்கட்டான சமயங்களில் முக்கிய உந்துதலாக இருந்தது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ((நன்றி மச்சான் என குறிப்பிட்டு)) மற்றும் நீதிபதி எம்.சத்யநாராயணனும் தான். வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்தின் மேன்மை காக்கப்படவில்லை என்றால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். சுதந்திர போராட்ட காலத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள். மேன்மையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

குடும்ப பிரச்சனை
மோட்டார் வாகன விபத்து மற்றும் திருமண விபத்து வழக்கு இரண்டும் மனிதர்களின் பிரச்சினைகள் தொடர்புடையவை. இதில் தொடர்புடைய குடும்பங்கள் உருக்குலைந்துபோகும். குழந்தைகள் பலிகடா ஆகிவிடுவார்கள். குடும்ப பிரச்சினைகளை காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லாதீர்கள்.

நீதிபதி வேண்டுகோள்
125 வயது உயர் நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். இளம் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும் . ஒவ்வொரு வழக்கறிஞரும் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் 3 அல்லது 5 ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும். வருபவர்களை தனது குழந்தையை போல நினைத்து சிறப்பான வழக்கறிஞரை உருவாக்க வேண்டும் .

ஊடகங்களுக்கு நன்றி
வழக்குகளில் மனசாட்சி படி தீர்ப்பளித்தேன்., நீதிமன்ற உத்தரவுகளை பிரேக்கிங் நியூஸ் மூலம் மக்களிடம் சரியான தகவலை கொண்டு சென்று பயிற்றுவித்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீதிபதியாக பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது மனநிறைவை அளிக்கவில்லை . மக்களின் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை பகுதி அளவில் அரசு மூட வேண்டும். அப்படி செய்தால் ஒரு நாள் மதுவிலக்கு அமலாகும்.

டெல்லி ஆதிக்கம்
டெல்லியும், மும்பையும் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன . உச்ச நீதிமன்றம் என்பது நாடு முழுவதுக்குமான என்ற நிலையில், அதை டெல்லியில் மட்டும் அமைத்திருப்பது, பிற மாநிலங்களிக்கு இழைக்கப்படும் அநீதி . எனவே மண்டல வாரியான கிளைகளை அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார். விழா நிறைவில் உயர் நீதிமன்றம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications