"பவர்".. ஆசைப்பட்டா ஆச்சா.. ஆனால் நிர்வாகம் பண்ண தெரியலையே.. தலையில் குட்டும் ஹைகோர்ட்கள்!
கொரோனாவை தடுக்க முடியாமல் பல்வேறு கட்சிகள் திணறுகின்றன
சென்னை: வடமாநிலங்களில் கொரோனா விஸ்வரூபமெடுத்து வருகிறது.. பெரும் குழப்பத்தில் பல்வேறு மாநிலங்கள் சிக்கி தவிக்கின்றன.. இதையடுத்து இந்த மாநிலங்களை ஆட்சி செய்து வரும் பாஜக, ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சிகளுக்கு அரசாங்க நிர்வாகத்தை சரியாக நடத்தத் தெரியவில்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த 2வது பரவல் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. முன்கூட்டியே அலர்ட் செய்திருந்தாலும் அதற்கான சரியான திட்டமிடலை மத்திய அரசு கையாளவில்லை என்பதே உண்மை. கண்டிப்பாக தடுமாறி விட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்று முதல் 15 மாநிலங்களை எடுத்துக் கொண்டால் முதலிடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது. இங்கு சிவசேனா ஆட்சி புரிந்து வருகிறது. சிவசேனா முதல்வர் பொறுப்பில் இருந்து ஆட்சி செய்வது இதுவே முதல் முறையாகும். இங்கு வரலாறு காணாத வகையில் பெரும் பேரிடரை அந்த மாநிலம் சந்தித்துக் கொண்டுள்ளது.
24 x 7 இயங்கும் மயானங்கள்.. உடலுடன் 20 மணி நேரம் காத்திருக்கும் உறவினர்கள்.. டெல்லியின் பரிதாபம்!
நிலவரம்
அதேபோல டாப் 15ல் வரும் கர்நாடகா, உ.பி, சட்டிஸ்கர், ம.பி, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கெல்லாம் உள்ள நிலவரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உபியில் நடந்து வ ரும் நிகழ்வுகளை அலகாபாத் ஹைகோர்ட் கையில் எடுத்துக் கொண்டு நேரடியாக கண்காணிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. லாக்டவுன் போடுங்கள் என்று ஹைகோர்ட் சொன்னால் அதைக் கேட்க உ.பி. அரசு மறுக்கும் நிலையும் காணப்படுகிறது. பெரும் உயிர்ச் சேதத்தை உபி சந்தித்துக் கொண்டுள்ளது.
கர்நாகடம்
குஜராத்தில் நிலவும் அவலம் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறோம். இதேபோல தான் சட்டிஸ்கர், கர்நாடகத்திலும். கர்நாடகத்தில் நிலைமை கை மீறிப் போய் விட்டதாக அந்த மாநில முதல்வர் எடியூரப்பாவே ஒபனாக சொல்லி விட்டார். ஹரியானாவிலும் நிலைமை சரியில்லை. மபியில் ஆம்புலன்ஸில் கொண்டு போகப்பட்ட உடல் வெளியே வந்து விழுந்ததே அந்த மாநிலத்தின் அவல நிலைக்கு நல்லதொரு உதாரணமாகும்.
மாநில முதல்வர்கள்
இதுதவிர ராஜஸ்தான் ( காங்கிரஸ் ஆட்சி), கேரளா (இடதுசாரிகள்), தமிழ்நாடு (அதிமுக), டெல்லி (ஆம் ஆத்மி),
ஆந்திரா (ஜெகன் மோகன் ரெட்டி), மேற்கு வங்கம் (மமதா), பீகார் (நிதீஷ் குமார்), ஒடிஷா (நவீன் பட்நாயக்) ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தனது ஆட்டத்தைக் காட்டிக் கொண்டுதான் உள்ளது. ஆனால் பாஜக, சிவசேனா மாநிலங்களைப் போல இந்த மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிருப்தி
கேரளாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை சுத்தமாக கிடையாது. தமிழ்நாடும் இந்த பிரச்சினையை அழகாக கையாண்டு வருகிறது. ஆனால் டெல்லி மிகப் பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார். ஆந்திராவிலும் நிலைமை சரியில்லை. மேற்கு வங்கத்திலும் நிலைமை மோசமாகி வருகிறது.
கும்பமேளா
இந்த கொரோனா 2வது அலையில் தேர்தல் ஆணையமும் தன்னால் முடிந்த அளவுக்கு சொதப்பியது. 5 மாநில தேர்தலில், பிரச்சாரங்களை கட்டுப்படுத்தவே இல்லை.. மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தலுக்கான காரணமும் தெளிவுபடுத்தப்படவில்லை. அதேபோல கும்பமேளா.. எத்தனையோ விமர்சனங்கள் வெடித்து கிளம்பியும், கும்பமேளாவை கடைசிவரை தடுத்து அந்த மாநில அரசு தடுத்து நிறுத்தவே இல்லை.. நிர்வாண சாதுக்கள் அமைப்பின் தலைவர் இதே கும்பமேளாவில் உயிரைவிட்டும், பாஜக தன் முடிவை கைவிடவில்லை.. கோர்ட்டும் இந்த விஷயத்தில் தலையிட முடியாத சூழலில், இந்த கும்பமேளாவின் விளைவுகளை தற்போது அந்த மாநிலம் மருத்துவமனைகளில் அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
பவர்
இப்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாமே கொரோனா தலைதூக்கி உள்ளது.. மத்திய அரசு கையில் இல்லாத பவர் எதுவும் இல்லை.. வானளாவிய அதிகாரங்களையும் பெற்றிருந்தும், ஆக்ஸிஜனை கையில் வைத்திருக்க முடியாத துர்சூழல் நிலவுகிறது.. இதைதான் சரியான திட்டமிடல் இல்லை என்று காங்கிரஸ் தொடர்ந்து சுட்டி காட்டுகிறது.
உற்பத்தி
ஒரு ஆக்ஸிஜன் ஆலை அமைக்க 45 நாட்கள்தான் தேவை என்கிறார்கள்.. ஆனால், 7 மாதமாக 165 ஆக்சிஜன் ஆலைகளிலும் உற்பத்தியை மத்திய அரசு தொடங்காமல் இருந்தது ஏன் என்று தெரியவில்லை.. அதேபோல, ஆக்சிஜனை கொண்டு செல்ல போக்குவரத்து நிர்வாகத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.. அந்த வகையில், உபியில் உச்சக்கட்ட பேரிடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. பாஜக மட்டுமல்ல, ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் கொரோனா வீரியம் தலைதூக்கி உள்ளது..
பாஜக
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகளை தர மறுப்பதாக மகாராஷ்டிரா அரசு குற்றம்சாட்டிவருகிறது. இதற்கு பாஜகவும் பதிலடி தந்து வந்தாலும், தேவேந்திர பட்நாவிஸ்தான் இதற்குக் காரணம் என்ற இன்னொரு குற்றச்சாட்டு அங்கு முன்வைக்கப்படுகிறது.. அதனால்தான், ஒரு எம்எல்ஏ, எனக்கு கொரோனா வைரஸ் கிடைத்தால், பட்நாவிஸ் வாயில் அந்த வைரஸை விடுவேன் என்று சொன்னார்.
கெஜ்ரிவால்
ஆம் ஆத்மியோ அதற்கு மேல் புலம்புகிறது.. "இன்னும் சில மணி நேரங்களில் எங்களின் ஆக்சிஜன் ஸ்டாக் தீர்ந்துவிடும்" என்று கதறி துடித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதனால், டெல்லியில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹைகோர்ட்
இப்படி, மகாராஷ்டிரா, டெல்லி, உபி மாநிலங்களில் நிலைமை படுமோசமானதை கண்டு, அந்தந்த ஹைகோர்ட்டுகளே நேரடியாக தலையிட வேண்டி உள்ளது.. ஒவ்வொன்றிலும் தலையிட்டு உத்தரவிட வேண்டி உள்ளது.. காரணம் இந்த மாநிலங்களுக்கு, இடர்பாடுகளை சந்திக்க தெரியவில்லை.. பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல் சிவசேனா, ஆம் ஆத்மி ஆகியவையும் நிர்வாக ரீதியாக பெரும் குழப்பத்தில் உள்ளன.
திட்டமிடல்
ஏனென்றால், பேரிடர் காலத்தை இந்த கட்சிகள் சந்திப்பது இதுவே முதல் முறை... அதனால்தான், ஆட்சி நிர்வாகத்தை சரியாக திட்டமிட முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள்.. ஒருவேளை அனுபவம் வாய்ந்த கட்சிகளாக இருந்திருந்தால் இவைகளை சமாளித்திருக்கலாம்.. நிலைமையை ஓரளவு தடுத்திருக்கலாம்.. ஆனால், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இவர்கள் இல்லை என்பதே உண்மை.
தடுமாற்றம்
அந்த விஷயத்தில் நாம் எவ்வளவோ பரவாயில்லை.. தமிழகம் ஆகட்டும், கேரளா ஆகட்டும், பெரிய அளவில் எந்தத் தடுமாற்றமும் நம்மிடம் இல்லை... அழகாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.. அதேபோல, மேற்கு வங்கமும் கூட பெரிதாக தடுமாறவில்லை... ஆனால் கர்நாடகம் தடுமாறுகிறது.. நிலைமை கைமீறி போய்விட்டது என்று அந்த மாநில முதல்வரே சொல்வது, பாஜகவின் தோல்விதான்.. இதுபோலவே, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.
நிர்வாகம்
ஆக, எத்தனை மாநிலங்கள்ல நாம் ஆட்சி செலுத்துகிறோம் என்பதைவிட, எப்படி ஆட்சி செலுத்துகிறோம் என்பதைதான் பாஜக உட்பட சில கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.. அதற்கான அனுபவ பாடத்தை இவர்கள் எட்ட இன்னும் பல காலங்கள் பிடிக்கும்..!