"வருங்கால முதல்வர் கமல்ஹாசன்".. ம.நீ.மவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.. கூட்டணிக்கும் ரெடி!
மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசனை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்போவதாக அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதாக அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்.
2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் அக்கட்சியின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் கட்சியின் நிலைப்பாடு என்ன?, கட்சிக்கு தேவையான நிதியை வலுப்பெறச் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது மற்றும் வேட்பாளர்காள் தேர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. குறிப்பாக கோவை, தென் சென்னை, வட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் தனித்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆலோசனை கூட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய துணைத்தலைவர் மகேந்திரன், 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யப்போவதாக கூறினார்.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணிக்காக வாய்ப்புகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார் மகேந்திரன்.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களப்பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நாமே தீர்வு இயக்கத்தில் பங்காற்றியவர்களுக்கும் களப்பணியாற்றியவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிர்வாகிகளை கூட்டத்தில் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என சீமான் அறிவித்துள்ளார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை!
234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணியுடன் தேர்தலை சந்திக்குமா? கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக கூட்டணி கட்சிகள் ஏற்று கொள்ளுமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். 2021 சட்டசபை தேர்தலில் பல முனை போட்டியும் பல முதல்வர் வேட்பாளர்களையும் தமிழக வாக்காளர்கள் சந்திக்கப்போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.