மாநில அரசு சேனல் நடத்த தடை.. தனியார் நிறுவனத்தின் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லையா? மநீம கேள்வி!
சென்னை: ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொலைக்காட்சி நடத்த அதிகாரம் இருக்கும் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு அந்த அதிகாரம் இல்லை என்பது கேலிக்கூத்தான ஒன்று என்று மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுடில் ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் விநியோகம் சார்ந்த நிறுவனங்கள் டிசம்பர் 31, 2023க்குள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
இதன் காரணமாக தமிழக அரசு நடத்தி வரும் கல்வி தொலைக்காட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் கல்வி தொலைக்காட்சி பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் சூழல் வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு தமிழக அரசு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மாநில சுயாட்சி
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "காலம் காலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று மக்கள் நீதி மய்யம் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகிறது. மாநில சுயாட்சி மட்டுமின்றி அதற்கு அடுத்த நிலையாக கிராமங்களுக்கு உள்ளாட்சியில் தன்னாட்சி வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு இப்போது தொலைக்காட்சி நடத்தும் அதிகாரம் தனக்கு கீழ்வரும் பிரச்சார் பாரதி நிறுவனத்துக்கே உண்டு என்று அறிவித்திருக்கிறது.

மாநில அரசின் அதிகாரம்
இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதால் மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. இதனால் ஏற்கெனவே மாநில அரசால் நடத்தப்படும் கல்வித் தொலைக்காட்சி தடைபடும் ஆபத்து இருப்பதை மக்கள் நீதி மய்யம் கவலையோடு பார்க்கிறது. ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொலைக்காட்சி நடத்த அதிகாரம் இருக்கும் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு அந்த அதிகாரம் இல்லை என்பது கேலிக்கூத்தான ஒன்றாகும்.

தமிழக அரசுக்கு கோரிக்கை
மாநில அரசு என்பது மத்திய அரசை அண்டி வாழும் அரசாக இருக்க வேண்டும் என்ற நினைப்பை உடனடியாக மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இதை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் நம் தமிழக அரசு தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இந்த அரசு இருக்கும் அதிகாரங்களையும் பறிகொடுத்துவிட்டு ஏமாந்து நிற்ககூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications