போய் வா மாறா உன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கிறோம் - மல்லை சத்யா உருக்கம்
போய் வா மாறா உன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம். உன் நோய் குறித்து முன்கூட்டியே சொல்லாததால் நோய்க்கு உண்டான மருந்தும் சிகிச்சை இருந்தும் அளவு கடந்த நம்பிக்கை இந்த கவவையான சூழ்நிலையை உருவாக்கி விட்டாய்.
சென்னை: போய் வா மாறா உன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம் என்று நடிகர் மாறன் மறைவுக்கு மல்லை சத்யா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அன்பின் தோழமைகளே விளையாட்டாக இருந்து விடாதீர்கள் சின்ன அறிகுறி என்றாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் வரும் முன் காப்பதே சிறந்த வழி
என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் அவருக்கு நண்பராக சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் மாறன். பாஸ் என்ற பாஸ்கரன், டிஸ்யூம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் மாறன் செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வந்தார்.

நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா சிகிச்சை பலனின்றி நடிகர் மாறன் இன்று காலை உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, நடிகர் மாறன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம். இன்று செங்கல்பட்டு நத்தம் பகுதியைச் சேர்ந்த என் உடன் பிறவாத சகோதரர் நடிகர் மாறன் அவர்கள் கோரொனா பெருந் தொற்றால் இன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி பேரிடியாக வந்தது.
நேற்று காலை சகோதரி திருமதி கிளாரமாறன் அவர்கள் தகவல் சொன்னதற்கு பிறகு தான் நிலைமை புரிந்தது அதற்கு பிறகு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிற்பகல் மாறனிடம் பேசினேன். ஏன் மாறா இப்படி செய்து விட்டாய் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவ சிகிச்சை பெற்று இருக்க வேண்டுமே என்றேன்.
ஒன்னும் ஆகாது அண்ணே விரைவில் நலம் பெற்று வருவேன் என்று சொன்னார் அதற்கு பிறகு இரவு சகோதரி கிளாரமாறனிடம் பேசிய போது தண்ணீர் கேட்டு குழந்தையைப் போன்று அடம் பிடிக்கின்றார் என்று சொன்னார் மருத்துவரிடம் ஆலோசித்து தேவைப்பட்டால் கொடு என்றேன் இரண்டு நாட்கள் கடந்து விட்டால் போதும் மருந்தின் காரணமாக நோய் கட்டுக்குள் வரும் விடியும் வரை காத்திரு என்றேன் விடியாமலே போய் விட்டது.
போய் வா மாறா உன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம். உன் நோய் குறித்து முன்கூட்டியே சொல்லாததால் நோய்க்கு உண்டான மருந்தும் சிகிச்சை இருந்தும் அளவு கடந்த நம்பிக்கை இந்த கவவையான சூழ்நிலையை உருவாக்கி விட்டாய்.
யார் அழைத்தாலும் ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டியவனே அழைத்தவன் எமன் என்று அறியாமல் உன்னை ஒப்புக் கொடுத்து விட்டயே. கடினமான சூழலை நீ எதிர் கொள்ளும் பொழுதெல்லாம் என் அண்ணன் மல்லை சத்யா இருக்கின்றார் என்று இறுமாந்து இருந்தயே ஏன் இந்த சூழலை என்னிடம் சொல்லாமல் மறைத்தாய் மாறா.
எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தவனே உன் இதய நேசிப்பிற்கு உரியவர்கள் எல்லாம் கலங்கி நிற்கின்றோம் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாமல்.
தலைவர் வைகோ அவர்கள் மாறனை நன்கு அறிவார் இன்று காலை தகவலை சொன்ன உடன் நம்ம நடிகர் மாறனா என்று தன் கவலையை பகிர்ந்து கொண்டார். 2009 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட கழக இடம் வாங்க நானும் அண்ணன் பாலவாக்கம் சோமு அவர்களும் இடம் பார்த்து கொண்டு இருந்த போது மாறன் சொல்லித் தான் அந்த இடத்தை வாங்கினோம். நன்றி மறவாதவன் மாறன் எங்கு பேசினாலும் தான் ஏறி வந்த ஏணிகள் குறித்து மறவாமல் பதிவு செய்வார்.
ஏப்ரல் 06 அன்று நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்குகள் சேகரித்த நல்ல உள்ளம். மே 02 தேர்தல் முடிவுக்கு பின்னர் வீட்டில் தேம்பி தேம்பி அழுதுள்ளார் ஒரு நல்ல மனிதரை மதுராந்தகம் தொகுதி மக்கள் இழந்து விட்டார்களே என்று.
மே 06 இரவு மாமல்லபுரத்திற்கு கண்ணீரோடு வந்து அமைதியாக நின்று கொண்டு இருந்தார் மாறன் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் ஆனால் இறுதி வரை அமைதியாக இருந்து விட்டு விடை பெற்றார் நாடு கடந்து நண்பர்களைப் பெற்றவன் பலருக்கு துணையாக இருந்த மாறன் விடை பெற்றான்.
அவரை இழந்து வாடும் அவர் காதல் மனைவி திருமதி கிளாரமாறன் அவர்களுக்கும் அவரின் அன்பு மகள் ஏஞ்சலுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை காலம் அவர்களை தேற்றும்
அன்பின் தோழமைகளே விளையாட்டாக இருந்து விடாதீர்கள் சின்ன அறிகுறி என்றாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் வரும் முன் காப்பதே சிறந்த வழி" என்று பதிவிட்டுள்ளார் மல்லை சத்யா.












Click it and Unblock the Notifications