ஹை கிளாஸ் நாய்க்குட்டி சார்.. கூடையை திறந்து பார்த்தா செல்ல குட்டி.. அழகு சிறுத்தை குட்டி!
சிறுத்தை குட்டியை கடத்தி வந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை: கூடைக்குள் கர்சீப் போட்டு மூடி மறைத்து நாடு கடத்தி கொண்டு வந்த சிறுத்தை குட்டியை விமான நிலைய போலீசார் பறிமுதல் செய்ததுடன், குட்டியை கடத்தி வந்த நபரையும் கைது செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில், ஒரு காட்டு விலங்கை சட்ட விரோதமாக கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படியே, நேற்று நள்ளிரவு தாய் ஏர்வேஸ் விமானம் வந்தது.
அதிலிருந்து இறங்கிய பயணிகள் அனைவரின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த காஜா முகைதீன் என்பவர் கையில் ஒரு மூங்கில் கூடையை பிடித்தபடி வந்து கொண்டு வந்திருந்தார்.
கூடையில் என்ன?
கூடைக்குள் ஒரு கர்சீப் போட்டு மூடப்பட்டிருந்தது. கூடையிலிருந்து வித்தியாசமான சத்தம் வந்தது. இதனை கவனித்த அதிகாரிகள், "அந்த கூடையில் என்ன உள்ளது" என்று கேட்டனர். அதற்கு முகைதீன், "இது ஹை கிளாஸ் நாய்க்குட்டி, வளர்ப்பதற்காக கொண்டு போகிறேன்" என்றார். பிறகு "எதற்கு கர்சீப் போட்டு மூட வேண்டும்" என்று கேட்டபடியே அதிகாரிகள் கர்சீப்பை அகற்றி பார்த்தனர்.
ஒரு மாத குட்டி
அப்போது ஒரு சிறுத்தை குட்டி திருதிருவென விழித்துகொண்டு உட்கார்ந்திருந்தது. பிறந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்குமாம். அதன் எடை 1.1 கிலோ இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனை விமானத்தில் கொண்டு வர ஏதேனும் அனுமதி வாங்கியிருக்கிறீர்களா? என்று அதிகாரிகள் கேட்டனர்.
முகைதீன் கைது
அதற்கு அந்த பயணி இல்லை என்று பதிலளித்ததும் அங்கேயே சிறுத்தைக் குட்டியை பறிமுதல் செய்துவிட்டனர். உடனடியாக மத்திய வன காப்பக குற்றபிரிவு போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, முகைதீன் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்து குட்டி
சிறுத்தை குட்டியை வீடுகளில் வளர்க்க இந்தியாவில் தடை இருக்கிறது. இந்நிலையில் இந்த குட்டி யாரிடம் இருந்து எங்கு கொண்டு போகிறார் என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இப்போது எந்த வித அனுமதியும் பெறப்படாமல் அந்த சிறுத்தை குட்டி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதால், தாய்லாந்து நாட்டுக்கே திரும்பவும் விமானத்தில் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.