காசு வந்துட்டு.. கார்டு வரல.. 'கோபம்' கோயம்பேட்டில் பங்கமான ஏடிஎம்.. மர்ம நபரை தேடும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள மதுரவாயலில் ஏடிஎம்மில் காசு எடுத்த நபர் கார்டு மாட்டிக்கொண்டதால் ஆத்திரத்தில் மெஷினை உடைத்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு தற்போது பெரும்பாலும் ஏடிஎம்களையே பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெரிய அளவில் பணம் எடுக்க வேண்டியிருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு நேரடியாக செல்ல முடிகிறது. மற்றபடி மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம் இயந்திரங்கள் மூலமே பெரிதும் எடுக்கிறார்கள். இதற்காக வங்கிகள் பிரதான இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களையும் நிறுவியுள்ளன.

இந்த ஏடிஎம்களில் மக்கள் தங்கள் டெபிட் கார்டுகளை கொண்டு பணம் எடுத்துக் கொள்ள முடியும். தற்போது வங்கிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மேக்னடிக் சிப் கொண்ட ஏடிஎம் கார்டுகளையே விநியோகிக்கப்படுகின்றன. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வரை இந்த கார்டுகளை நம்மால் கையில் எடுக்க முடியாது. பணத்தை எடுத்த பிறகே கார்டை இயந்திரம் ரிலீஸ் செய்யும்.
சில சமயங்களில் தொழில் நுட்ப கோளாறுகளால் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வராமலே அக்கவுண்டில் பணம் எடுத்ததாக மெசேஜ் வரும். அதேபோல, இந்தியரங்களில் கார்டும் சிக்கிக் கொள்ளவும் செய்கிறது. இதுகுறித்து வங்கியில் முறையிட்டால் எளிதில் இவற்றை பெற முடியும். எனினும் ஒரு சிலர் பணம் வராமல் போனாலோ, பரிவர்த்தனை முடிந்தாலோ டென்ஷன் ஆகி புலம்புவதுண்டு.
ஒருசிலர் ஏஎடிம் இயந்திரத்தோடு போராடி அவற்றை கார்டையே உடைத்துக் கொள்ளும் போக்கும் காணப்படுகிறது. அதேபோல ஒரு நிகழ்வில் தான் சென்னையில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து கார்டு வரவில்லை என்பதற்காக ஏடிஎம் எந்திரத்தை உடைத்து விட்டு சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:- சென்னை மதுரவாயல் திருவள்ளூர் சாலையில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தை நேற்று இரவு காவலாளி வழக்கம் போல் ஆய்வு செய்ய சென்றார். அப்போது ஏடிஎம் கார்டு வைக்கும் இடம் சேதம் அடைந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி போலீசருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம்க்கு பணம் எடுக்க வந்த ஒருவர் இயந்திரத்தை உடைப்பது பதிவாகி இருந்தது.
இதனால் பணம் எதுவும் திருடப்பட்டதா என போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், திருடு போகவில்லை. ஏடிஎம் கார்டு வராமல் மாட்டிக்கொண்டதால் கோபத்தில் அடித்து உடைத்துவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications