புயலாகவே கரையை கடக்கும் "மாண்டஸ்".. வலுவிழக்காது என வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களில் அதிகனமழை?
சென்னை: வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள மாண்டஸ் புயல், வலுவிழக்காமல் புயலாகவே கரையை கடக்கும் என இந்திய வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வட தமிழகம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 85 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய நிலவரப்படி புயல் எந்தப் பகுதியில் சரியாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை. எனினும், புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயல் கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நாளை உருவாகிறது புரேவி புயல்- இலங்கையில் கரையை கடந்து புயலாகவே குமரி கடல் நோக்கி நகரும்!
மணிக்கு 8 கி.மீ வேகத்தில்..
வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில், நாளை இது புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று நள்ளிரவு சுமார் 3 மணியளவிலேயே இது புயலாக வலுப்பெற்றுவிட்டது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவில் புயல் நிலைக்கொண்டு இருக்கிறது. 'மாண்டஸ்' என பெயரிடப்பட்ட இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
அடித்து நொறுக்குமா 'மாண்டஸ்'?
தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு மேற்கு - வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் புதுச்சேரி - ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே இந்த மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், நகர்ந்து வரும் வழியில் புயலின் திசை மாறவும் வாய்ப்பு இருப்பதால், அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை திட்டவட்டமாக வானிலை மையம் தெரிவிக்கவில்லை. இதனிடையே, இந்த புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அது புயலாகவே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், வட தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்ப்டிருக்கிறது.
எப்போது - எங்கெங்கு அதிகனமழை?
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதன் வேகம் 75 கி.மீ. முதல் 85 கி.மீ. வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று இரவு முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வட தமிழகம், டெல்டா பகுதி என 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய தொடங்கும் என்றும், நேரம் செல்ல செல்ல மழைப்பொழிவின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுரை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்நிலையில், புயல் கரையை கடக்கும் போது, அதாவது நாளை நள்ளிரவு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் மிக அதிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயார்நிலையில் மீட்புப்படை
இந்நிலையில், புயல் நெருங்கி வருவதால் எண்ணூர், நாகை, புதுச்சேரி ஆகிய இடங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.