முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு.. மெரினா மரப்பாதை என்னாச்சு? - சேகர்பாபு தகவல்!
சென்னை : மாண்டஸ் புயலுக்கு முன்பாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. மாமல்லபுரத்தில் புயல் கரையை கடக்கும்போது வீசிய பலத்த காற்றால் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன.
புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் 400க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. வடசென்னை பகுதிகளில் புயல் பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
சூறையாடிய மாண்டஸ்..தவிக்கும் மக்கள்.. திருவண்ணாமலையில் 25 செமீ மழை..எங்கெங்கு வெள்ளம்
மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நுங்கம்பாக்கம் , பூந்தமல்லி, புழல் பகுதிகளில் 10 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. காஞ்சிபுரத்தில் ஏழு செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.
மின் விநியோகம் தடை
சென்னையில் பெய்த கனமழை மற்றும் வீசிய புயல் காற்றால் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டதால் இரவு முழுவதும் மின் விளக்குகள் இன்றி இருளில் மூழ்கியது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. மாண்டஸ் புயலினால் மெரினா கடற்கரையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மரப்பாதை சேதமடைந்தது.
அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். வடசென்னை பகுதிகளில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பெரும் சேதம் தவிர்ப்பு
மேலும், மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
மெரினா மரப்பாதை சேதம்
மேலும் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை சேதமடைந்துள்ளது. இயற்கை சீற்றத்தினால் இது நடந்துள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் கான்கிரீட் அமைப்புகளுக்கோ, இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்க அனுமதி இல்லை. அதனாலேயே மரப்பாதை அமைக்கப்பட்டது.
2, 3 நாட்களில்
எதிர்காலத்தில் இன்னும் வலுவான பாதையை அமைக்க நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சேதமடைந்த பாதை இன்னும் 2, 3 தினங்களில் சீரமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மீண்டும் கடலையும், கடற்கரையையும் ரசிக்கும்படி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.