கைமாறிய ஸ்வீட் பாக்ஸ்.. “கசிந்த கண்ணீர்” ஓபிஎஸ் சொன்ன வார்த்தையால் ரீ-என்ட்ரி கொடுத்த மருது அழகுராஜ்
சென்னை : எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்வதாக கடந்த வாரம் அறிவித்த மருது அழகுராஜ், ஓபிஎஸ் அன்பு கட்டளையை ஏற்று மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அதிமுக செய்தித் தொடர்பாளர், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் விலகிய மருது அழகுராஜ், ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார்.
கடந்த வாரம் திடீரென அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அதிர்ச்சி கிளப்பினார். ஜெயலலிதா, சசிகலா, எடப்பாடி பழனிசாமி என பலருக்கும் உரை, அறிக்கைகள் எழுதிக் கொடுத்த மருது அழகுராஜ், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை ஸ்வீட் பாக்ஸுடன் சென்று சந்தித்த மருது அழகுராஜ், இன்று மருது சகோதரர்கள் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அரசியலில் இருந்து விலகல்?
அதிமுக செய்தித் தொடர்பாளராகவும், நமது அம்மா நாளிதழ் ஆசிரியராகவும் இருந்த மருது அழகுராஜ், ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலுக்குப் பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் அரசியலிலிருந்தே விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுகாலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்" என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

எடப்பாடிக்கு எதிராக
கடந்த ஜூன் மாதம் முதல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் மருது அழகுராஜ். குறிப்பாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார் எனக் கூறி வந்தார். எடப்பாடி பழனிசாமி, அவருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் ஆகியோரிடம் கோடநாடு மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கும் ஆஜராகி பல்வேறு தகவல்களை அளித்தார்.

அரசியலில் ரீ-எண்ட்ரி
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் கடந்த வாரம் திடீரென அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், மருது அழகுராஜை அழைத்து விசாரித்துள்ளார். ஓபிஎஸ்ஸை பார்க்க ஸ்வீட் பாக்ஸோடு சென்றிருக்கிறார் மருது அழகுராஜ். அரசியலில் இருந்து விலகும் முடிவைக் கைவிடுங்கள் என ஓபிஎஸ் அன்புக் கட்டளை இட்டதைத் தொடர்ந்து, மீண்டும் தனது அரசியல் ரீ-எண்ட்ரியை தொடங்கி இருக்கிறார் மருது அழகுராஜ்.

ஓபிஎஸ் அழைத்தார்
இதுதொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "நாளை முதல் களத்தில்.. அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்த என்னை அழைத்தார் அண்ணன்.. விலகளுக்கான விவரம் கேட்டார்.. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட மனஉளைச்சல் உடல் சோர்வு குடும்பத்தாரின் வேதனைகள் இவற்றை கருத்தில் கொண்ட முடிவு என்றேன்.. உங்கள் எழுத்தும் பேச்சும் தொடர வேண்டும், சகோதரன் நான் இருக்கிறேன்.. வேதனைகள் கழுத்தை நெரிப்பது வெற்றியை நாம் நெருங்குவதை கூறுகிற சகுனம் என்றார்.

கசியும் கண்ணீரோடு
விலகுதல் என்கிற பேச்சே இனி இருக்கக் கூடாது அயற்சியை அப்புறப்படுத்திவிட்டு முயற்சியை முன் எடுங்கள் அம்மா ஆசி உங்களுக்கு உண்டு.. என் அன்புக் கட்டளை இது என்றார். நாளைக்கு காளையார்கோவிலுக்கு அவசியம் வாங்க.. மருதிருவரை வழிபட்டு மருதுவின் மறுபிரவேசம் தொடங்கட்டும் என்றார்.. கசியும் கண்ணீரோடு ஆமோதித்தேன். எடப்பாடி ஏற்படுத்திய பிளவு ஓ.பி.எஸ் என்னும் மகத்தான மனிதரின் உன்னதத்தை உணர வைத்தது.

களத்தில் மருது
உயிருள்ள காலம் வரை கழகத்திற்கு உழைக்க வேண்டும் என்னும் உறுதியை குருதியில் தீர்க்கமாய் உறைய வைத்தது. குறிப்பாக என்னை விடாமல் துரத்தி விலகல் முடிவை திரும்பப் பெறவேண்டும் என உரிமை வேண்டுகோள்களால் என்னை உருக வைத்த நட்புக்கும் உறவுக்கும் நன்றி.. நாளை முதல் களத்தில்.." என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications