மத்திய அரசு நிதியை மாற்றி செலவழித்த அதிமுக அரசு! மார்க்சிஸ்ட் பகீர்புகார்! மாஜி மந்திரிக்கு சிக்கல்
சென்னை: மாசுகட்டுப்பாட்டு பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.180 கோடியை கடந்த அதிமுக அரசு சாலை, வடிகால் பணிகளுக்கு மாற்றி பயன்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன் வைக்கும் இந்தக் குற்றச்சாட்டால் அதிமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த கருப்பணன் விளக்கம் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? கூட்டணியான திமுகவை விளாசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. நடந்தது என்ன?
மத்திய அரசு நிதி
2018ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு இருமுறை தலா ரூ. 90
கோடி வீதம் சென்னை, பெருநகர பகுதிக்குள் மாசுக்கட்டுப்பாட்டிற்காக ஒன்றிய
அரசு ரூ.180 கோடி அளித்து வந்திருக்கிறது. இந்த நிதியை கடந்த அஇஅதிமுகஅரசாங்கம் முழுக்க, முழுக்க சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்காகவேபயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காற்று மாசுபாடு
பருவ நிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் நுரையீரல்கள் நோய்கள் ஆகியவற்றின் பின்னணியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் காற்று மாசுபாடுகட்டுப்பாட்டு தரத்தை சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் அடையவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த காரணத்தினால் குழந்தைகள், முதியோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மாற்றி பயன்படுத்தியது
இதனால் மருத்துவ கட்டமைப்புகள் மீது அழுத்தம் ஏற்படுவதோடு தனிநபர் மற்றும்
குடும்பங்களின் மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கின்றன. காற்றில் கலந்துள்ள
நுன்துகள்களை கட்டுப்படுத்தவும், பசுங்கூட வாயுக்களை குறைக்கவும், சர்வதேச
அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் முந்தைய அஇஅதிமுக அரசு இந்நிதியை
மாசுக்கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தாமல் இதர பணிகளுக்கு பயன்படுத்தியது
முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது கண்டிக்கத்தக்கது. மக்களின் உடல்நிலை,
சுற்றுச்சூழல் ஆகியவற்றை புறக்கணிக்கும் செயலாகும்.
அதிகாரிகளுக்கு அட்வைஸ்
எனவே, இந்த நிதியை நான்காண்டுகளாக முறையாக பயன்படுத்தாத அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்தல் அளிப்பதோடு, எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், நாளுக்கு நாள்
மோசமடைந்து வரும் காற்று மாசுத் தன்மையை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.