நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் திடீர் விலகல்.. சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாதக மாநில சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முகமது அலி ஜின்னா, தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைத் தலைவர் வினோத்குமார் ஆகியோரும் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
கடலூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நாகத தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.

நாதக நிர்வாகிகள் விலகல்
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து கட்சியில் விலகி வருகின்றனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகினர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் ஆறுமுகம் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சிவகுமார் உடன் நாம் தமிழர் கட்சி மாநில சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முகமது அலி ஜின்னா, ஐடி விங் மாநில துணைத்தலைவர் வினோத்குமார் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
சீமான் மீது குற்றச்சாட்டு
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கடலூரில் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், "தன்னை தலைவனாக ஏற்று வந்த தன் கட்சி தம்பி தங்கைகளையே பிசிறு என்பார், ம*று என்பார் வேசி மகன் என்பார். இருந்தால் இரு.. போனால் போ.. என்பார். தன்னை நாடி வந்தவர்களை பாதுகாப்பதை தவிர்த்து வேலியே பயிரை மேய்வது போல செயலாற்றுவார்.
ஒரு அரசியல் கட்சியின் நோக்கம் என்பது வெற்றியாகத்தான் இருக்கமுடியமே தவிர மாறாக பயிற்சி என்று சொல்லி கட்சியையே பணயம் வைக்கிறார். தேசிய அளவில் எந்த கட்சியினரும் இல்லாத அளவிற்கு சரமாரியாக, தான்தோன்றியாக 12,000 மாநில நிர்வாகிகள் நியமித்து தொண்டர்களே இல்லாத மாநில நிர்வாகிகள் கொண்ட கட்சியாக மாற்றியுள்ளார்.
தலைமைக்கும் தொண்டர்களுக்கும் தொடர்பே இல்லை
தலைமைக்கும் தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லாத இயக்கமாக நாம் தமிழர் கட்சி தள்ளாடுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் தனது எதிரி என்பார். மற்ற அமைச்சர்களை மாமன் மச்சான் என்பார். ஆடு பகை குட்டி உறவு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரின் அவலம் தொடர்கிறது.
தேர்தலுக்கு தேர்தல் நான் வளர்கிறேனே மம்மி என்று காம்பிளான் விளம்பரம் போல, ஆபரேசன் சக்சஸ், பேசண்ட் டெத் என்பது போல வாக்கு சதவீதம் உயர்வு, டெபாசிட் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நோட்டாவிற்கு கூட தமிழகத்தில் ஐந்து லட்சம் வாக்குகள் (2.1சதவீதம்) கிடைத்தது. நோட்டாவிற்கு யார் பிரச்சாரம் செய்தார்கள்? யார் வாக்கு கேட்டார்கள்?
இனியாவது திருந்த வேண்டும்
நாம் தமிழர் கட்சியின் வாக்கு என்பது திமுக - அதிமுக - பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான வெறுப்பு வாக்குகள் தானே ஒழிய, நாம் தமிழரின் ஆதரவு வாக்குகள் இல்லை என்பதை நாம் தமிழர் தலைமை உணரவேண்டும். உணராமல் போனது அவரின் அறியாமை.
அறியாமையிலிருந்து விடுபட வேண்டும். எண்ணற்ற தன்னல கருதா தம்பிகளின் உழைப்பை மதித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை இனியாவது திருந்த வேண்டும் என்று விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications