முதல்வரின் முன்னெச்சரிக்கையால் உயிர் சேதம் பெருமளவில் தவிர்ப்பு - கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
முதல்வரின் சீரிய நடவடிக்கையால் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 18பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு எடுத்த சரியான நடவடிக்கை காரணமாக சொத்துகள் சேதமும் பெருமளவில் தடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் ராமச்சந்திரன்.
வடகிழக்கு பருவமழை வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 6 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமழை பெய்தது. சென்னையில் விடாமல் கொட்டிய மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனிடையே வெள்ளச்சேதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், முதல்வரின் சீரிய நடவடிக்கையாலும் முன்னெச்சரிக்கை காரணமாகவும் உயிரிழப்பும் பொருட்சேதமும் தடுக்கப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கடந்த 2015 ஆம் ஆண்டு இரவில் யாருக்கும் சொல்லாமல் தண்ணீர் திறந்துவிட்டதால் 174 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு எடுத்த சரியான நடவடிக்கை காரணமாக 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சொத்துகள் சேதமும் பெருமளவில் தடுக்கப்பட்டது.
உயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். மழை பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்கும். மழையின் அளவை பொறுத்து ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறினார்.
இதற்கிடையே டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேத பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓரிருநாளில் சென்னை நிலவரம் சரி செய்யப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் தெரிவித்தார்.

இதனிடையே சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 810 நபர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு 87 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய, 13 காவல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர் பகுதியில் 87 தற்காலிக முகாம்களில் ஆயிரத்து 844 ஆண்கள், ஆயிரத்து 963 பெண்கள், 994 குழந்தைகள், உள்ளிட்ட 4ஆயிரத்து 810 நபர்கள் உணவு வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications