உதயசூரியன் சின்னத்தில் போட்டி- தேர்தலுக்குப் பின் "திமுகவுடன் மதிமுக இணைப்பு"- வைகோ அதிரடி திட்டம்
சென்னை: சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முக்கியமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக வைகோ கூறி வருகிறார். அதாவது மதிமுகவை திமுகவில் இணைப்பதுதான் அந்த முடிவாக இருக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தலைமையுடன் மோதி மதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கினார் வைகோ. வாரிசு அரசியலுக்கு எதிராக தனிக்கட்சி தொடங்கியவர் வைகோ.
அதனால் தமது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் கட்சியில் தலையிடாத வகையில் பார்த்து கொண்டார் வைகோ. காலச் சக்கரத்தில் திமுகவுடனேயே கூட்டணியும் அமைத்தார்; திமுகவை ஒழிக்காமல் ஓயமாட்டேன் என பிரசாரம் செய்தார்.
ஜெயலலிதா, கருணாநிதி
எந்த ஜெயலலிதா பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தாரோ அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார்; அதே ஜெயலலிதாவை அன்புச் சகோதரி என அழைத்தார். அண்ணன் அண்ணன் என்று கருணாநிதியிடம் உருகிய வைகோ ஒவ்வொரு தேர்தலின் போதும் அவருக்கு துரோகம் செய்த கதைகளோ ஏராளம்.
27 ஆண்டுகால தோல்வி
வைகோவின் இந்த 27 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தேர்தல் களம் பெரும்பாலும் தோல்விகளையே தந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமே வைகோ எந்த கூட்டணியிலும் நம்பகத்தன்மை கொண்ட தலைவராக இல்லை என்பதுதான். எந்த திமுகவை எதிர்த்து எந்த ஸ்டாலினை எதிர்த்து பிரசாரம் செய்தாரோ, தனிக்கட்சி தொடங்கினாரோ அதே திமுகவால் அதே ஸ்டாலினால் இன்று ராஜ்யசபா எம்.பி.யாகி இருக்கிறார் வைகோ.
உதயசூரியன் சின்னத்தில் போட்டி
எந்த உதயசூரியன் சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என்று நீதிமன்ற படிகளேறி கருணாநிதியையே கதிகலங்க செய்தாரோ அதே உதயசூரியன் சின்னத்தில் இப்போது மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ஏற்கனவே கணேசமூர்த்தி திமுகவில் உறுப்பினராகித்தான் லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
வைகோ சூசக பேச்சு
இப்போது மதிமுக பெற்றுள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் முறைப்படி திமுக உறுப்பினராகித்தான் உதயசூரியனில் போட்டியிட முடியும். இனியும் தனித்து கட்சி நடத்தி காலம் தள்ள முடியாது; மகன் துரை வையாபுரிக்கும் ஒரு அரசியல் எதிர்காலம் வேண்டும்..இந்த இரண்டையும் மனதில் வைத்து கொண்டுதான் தேர்தலுக்குப் பின் ஒரு முக்கியமான முடிவை பொதுக்குழுவில் அறிவிப்பேன் என பேசி வருகிறார் வைகோ.
திமுக- மதிமுக இணைப்பு
வைகோ முன்பு இருக்கும் ஒரே வாய்ப்பு திமுக- மதிமுக இணைப்புதான். இதனைத்தான் சூசகமாகவே வைகோ சொல்லி வருகிறார் என்கின்றனர் மதிமுகவின் உயர்நிலை வட்டாரங்கள்.