'மீண்டும்-மஞ்சப்பை'..'பிளாஸ்டிக்குக்கு குட் பை'..விழிப்புணர்வில் இறங்கிய இளைஞர்கள்..செம ட்வீட்கள்
சென்னை: சமீப காலமாக உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருவது சுற்றுச்சூழல் மாசுபாடுதான். சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு மூல காரணியாக விளங்குவது பிளாஸ்டிக். பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் மண்ணில் நிலை கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளின் உயிருக்கும் உலை வைத்து வருகிறது.
Recommended Video
ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் என்று அனைத்தையும் விட்டு வைக்காமல் நாசப்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் உயிரினங்களை அடியோடு அழித்து விடுகின்றன. பிளாஸ்டிக்கின் தீமையை உணர்ந்த இந்தியாவும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

பிளாஸ்டிக் எனும் வில்லன்
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் கவர்களை முழுமையாக ஒழித்து துணிப்பைகள் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

மீண்டும்-மஞ்சப்பை
இந்த நிலையில் மீண்டும்-மஞ்சப்பை என்ற வாக்கியம் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. மீண்டும்-மஞ்சப்பை பிரசாரத்தை கையில் எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வரும் நெட்டின்சன்கள் பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துரைத்து வருகின்றனர். நமது முன்னோர்கள் எல்லாம் மஞ்சப்பையான துணிப்பையைதான் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் இந்த மஞ்சப்பை புழக்கம் ஒழிந்து பிளாஸ்டிக் பைகள் வந்து விட்டன.

அப்போது கிண்டல்.. இப்போது?
அதன்பின்னர் பெரு நகரங்களில் ஒருவர் மஞ்சப்பை கொண்டு சென்றாலே அவர் கிராமத்தான் என்று கிண்டல் செய்யப்படும் அளவுக்கு பிளாஸ்டிக் பைகள் மக்கள் மனதில் பதிந்து விட்டது. தற்போது பிளாஸ்டிக்கின் கொடூரத்தை புரிந்து கொண்ட மக்கள், மீண்டும்-மஞ்சப்பை என்பதை வைரலாக்கி வருவது பெருமையாக உள்ளது. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் பலர் மீண்டும்-மஞ்சப்பை என்ற ஹேஷ்டேக்கின் கீழே பிளாஸ்டிக் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆதிக்கம் அதிகமாக வேண்டும்
''மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தி நெகிழி பயன்பாட்டை இல்லாமல் செய்து நெகிழி இல்லா தமிழகத்தை வருங்கால சந்ததியினருக்கு கொடுப்பதும் சுற்றுசூழலை பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமை
#மீண்டும்_மஞ்சப்பை'' என்று டுவிட்டரில் ராமன் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார். ''நாளைய தலைமுறை
நலமுடன் வாழ உங்கள்கரங்கள் என்னை இறுகபற்றிக்கொள்ளட்டும்'' என்று மஞ்சப்பை கூறுவதுபோல் துயிலன் என்பவர் கமெண்ட் செய்துள்ளார். மஞ்சப்பை ஆதிக்கம் அதிகமாக வேண்டும். கூடிய விரைவில் பிளாஸ்டிக் இந்த பூமியில் இருந்தே ஒழிய வேண்டும்.












Click it and Unblock the Notifications