சென்னையில் கொரோனா செகண்ட் வேவ்.. யாரை அதிகம் பாதித்திருக்கு தெரியுமா? ஷாக் தகவல்
சென்னை; சென்னையில் ஆண்களே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சியில் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகம் அதிகமாக உள்ளது.
ஒரு நாளில் ஆயிரத்திற்கு கீழ் இருந்த பாதிப்பு, ஒவ்வொரு நாளும் 4 ஆயிரத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1520பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் 259320 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 243395 பூரணமாக குணமடைந்து உள்ளனர். 11633 தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4292 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
பாதிப்பு
சென்னைக்கு நேற்று காலை நிலவரப்படி வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 ஆயிரத்து 684 விமானங்களில் பயணம் செய்த 23 லட்சத்து 77 ஆயிரத்து 375 பயணிகளை பரிசோதனை செய்யப்பட்டனர். இதில் 425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிவந்துள்ளது.
யாருக்கு அதிக பாதிப்பு
சென்னையில் அதிகமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதம் பேரும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதம் பேரும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெண்களுக்கு குறைவு
மிக குறைந்தப்பட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதம் ஆகும். பெண்கள் 40.29 சதவீதம் ஆகும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வீடு வீடாக சோதனை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். புரசைவாக்கம், வேப்பேரி, சூளைமேடு, கொளத்தூர், அண்ணாநகர், முகப்பேர், மாதவரம், ராயப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. காய்ச்சல், தலைவலி இருந்தால் காய்ச்சல் முகாம்களை அணுகலாம்,