அடுத்த 6 நாட்கள்.. சென்னை மட்டுமல்ல.. தமிழ்நாட்டுக்கே இதுதான் வானிலை நிலைமையாம்!
சென்னை: சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அடுத்த 6 நாட்களுக்கு பரவலான இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வழக்கமாக மார்ச்சில் தொடங்க வேண்டிய வெயில் கொஞ்சம் அட்வான்ஸ்ஸாக பிப்ரவரியிலேயே தலை காட்டியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். அப்போது தொடங்கிய வெயில் ஜூன் இறுதி வரை வாட்டி எடுத்தது. பின்னர் ஜூலை மாதம் ஒரு சில நாட்களில் மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம்தான் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஜூலை இறுதியிலிருந்து மழை பெய்ய தொடங்கிவிடும். ஆனால், இம்முறை ஆகஸ்ட் வந்த பின்னரும் கூட மழை தொடங்கவில்லை.

இதனால் பல்வேறு தரப்பு மக்களும் கடும் சிக்கலை எதிர்கொண்டனர். இப்படி இருக்கும்போதுதான் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே லேசான மழை எட்டி பார்த்தது. குறிப்பாக சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்க தொடங்கியது. குறிப்பாக புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருந்தது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அநேக இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் (ஆக.15 மற்றும் ஆக.16) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல வரும் 17ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த அளவில், இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 96.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் இருக்கும். அதேபோல குறைந்தபட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் பதிவாகும். மழையை பொறுத்த அளவில் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்றும் நாளையும் (ஆக.15 மற்றும் ஆக.16) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 16.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications