குடியரசு தின அணிவகுப்பு.. தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குடியரசுத் தின அணிவகுப்பில் பங்குபெற இருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய பாதுகாப்புத்துறை வல்லுனர் குழு அனுமதி அளிக்கவில்லை.
கேரளா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில ஊர்திகளுக்கும் அனுமதி தரப்படவில்லை. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியும், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
40 கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி படப்பை குணா கோர்ட்டில் திடீர் சரண்!
வழக்கு
இந்த நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கறிஞர் பாபு என்பவர் சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன் தொடுக்கப்பட்ட வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் வழக்கறிஞர் பாபு சார்பாக செல்வி ஜார்ஜ் சென்ற வழக்கறிஞர் ஆஜர் ஆனார்.
விசாரணை
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். குடியரசுத் தினத்திற்கு முன் இந்த வழக்கில் உத்தரவு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் முறையாக மனுதாக்கல் செய்தால் இந்த வழக்கை திங்கள் அல்லது செவ்வாய் கிழமை விசாரிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படியே நேற்று முறையாக மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.
அலங்கார ஊர்தி
ஆனால் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு முக்கியமான சில ஆவணங்களை தாக்கல் செய்யப்படவில்லை. அதாவது தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை அனுப்பியதற்கான விண்ணப்ப ஆவணம் தாக்கல் செய்யப்படவில்லை. இதை மத்திய அரசின் வல்லுனர் குழு நிராகரித்ததற்கான ஆவணமும் இல்லை. இரண்டு ஆவணங்களும் இல்லாத நிலையில் மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
நிராகரிப்பு
அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தான் வழக்கு தொடர வேண்டும். எழுத்துப்பூர்வமான உத்தரவு இல்லாததால் வழக்கை ஏற்க முடியாது. ஆவணங்கள் எதுவும் இதில் விளக்கமாக சமர்பிக்கப்படவில்லை. எனவே குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.