இனி மின்கட்டண தாமதத்துக்கு ஃபைன் இல்லை.. சென்னை உள்பட 4 மாவட்ட தொழில் முனைவோருக்கு கால அவகாசம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட காலநீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின்நுகர்வோர்கள் அனைவரும் பொருந்தும் என் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பாதித்தது. இதில் காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

மாறாக சென்னை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். உணவு இன்றியும் தவித்தனர்.
இதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் மீட்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அதோடு பல ஆயிரம் மக்கள் படகுகளில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பல இடங்களில் மழை வெள்ளம் வடிந்து படிப்படியாக சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதற்கிடையே தான் மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 7 வரை இருந்ததது. மழை வெள்ளத்தால் இந்த காலஅவகாசத்தை அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதமின்றி செலுத்துவதற்கான கடைசி தேதி என்பது டிசம்பர் 18 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
அதோடு மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை அபராத தொகை செலுத்தி இருப்பின் அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், மிக்ஜாம் புயல் கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து கடந்த 6ம் தேதி அறிவிப்பானை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மின்உபயோகிப்பாளர்கள் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 வரை காலநீட்டிப்பு செய்து வழங்கப்பட்டது.
தற்போது இந்த காலநீட்டிப்பில் சிறு, குறு, நடுத்தர தொழில் மின்நுகர்வோர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஆணையின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்'' என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications