பொங்கல் பரிசில் கரும்பு இல்லையா? அதான் வயல் மார்க்கெட்ல இருக்கே! அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில்!
சென்னை : தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் இந்தாண்டு 1000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரும்பையும் சேர்த்து வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் எவ்வளவு பணம் தருவார்கள்? இலவச வேட்டி சேலையோடு, ரொக்கமாகவா அல்லது பொருளாகவா என்பது குறித்து தொடர்ந்து சிந்தித்து வந்தனர். அதற்கு தற்போது விடை கொடுத்திருக்கிறது தமிழக அரசு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதேபோல் திமுக பொறுப்பேற்றது வழங்கப்படுமென மக்கள் எதிர்பார்த்தனர்.

பொங்கல் தொகுப்பு
ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

கரும்பு மிஸ்ஸிங்
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ரொக்க பணத்தை கூடுதலாக வழங்க வேண்டுமெனவும், பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

துரைமுருகன்
தமிழக அரசு பொங்கல் கரும்பினை கொள்முதல் செய்யாவிட்டால் விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் தமிழக அரசு உடனடியாக பொங்கல் பரிசு தொகையில் கரும்பை இணைத்து வழங்க வேண்டும் என கடலூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பரிசு கரும்பு இல்லை என்பது குறித்து தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார்.

கிண்டல்
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை எனக் கூறி விவசாயிகள் சில இடங்களில் போராட்டம் நடத்துகிறார்களே... என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்," ''கரும்பு மார்க்கெட்டில் இருக்கிறது, வயலில் இருக்கிறது, கரும்பு எங்கும் இருக்கிறது,'' என, அமைச்சர் துரைமுருகன் கிண்டலாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications