திடீர் காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி.. உடனே அமைச்சர்கள் விசிட்!
சென்னை : கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் சென்று சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தனர்.
Recommended Video
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமிக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அமைச்சராக இருப்பதால், அலுவல் பணிகளில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உடனே சென்னை சென்றார் ஐ.பெரியசாமி.

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்நிலையில், திண்டுக்கல் வந்த அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் மீண்டு வருகிறது.
மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளுக்காகவும், ஆய்வுக்காகவும் வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தகவல் அறிந்து, மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்து நலம் விசாரித்தார்.
மேலும், மருத்துவர்களிடமும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார். அவருடன் மதுரையைச் சேர்ந்த பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியும் அமைச்சர் ஐ.பெரியசாமியைப் பார்த்து நலம் விசாரித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு பற்றி அறிந்த திமுக தொண்டர்கள், மருத்துவமனை முன்பு குவிந்தனர். அவர்களை நிர்வாகிகள், ஓரிரு நாட்களில் வீட்டுக்கு வந்துவிடுவார் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications