சண்டைபோட்டு வாங்குறாரு.. உங்களுக்கு வலுவான ஆள் கிடைச்சிட்டாரு! செந்தில்பாலாஜியை புகழ்ந்த சக அமைச்சர்
சென்னை : கோவை மாவட்டத்தின் மீது முதலமைச்சருக்கு தனிப்பட்ட அக்கறை உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருப்பது நல்ல காரியம். இப்பகுதி முன்னேற வேண்டும் என நினைக்கிறார். கோவை மக்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சண்டை கட்டி வாங்கிவிடுகிறார் எனத் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.
மேலும், இ-சேவை மையங்கள் குறைவாக இருப்பது உண்மைதான் எனவும் இ-சேவை மையங்களில் சில தவறுகள் நடப்பதாக கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளா அரசு தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே செய்யக் கூடாது என கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
’ஆர்வக் கோளாறு’ நடுவானில் திறந்த எமர்ஜென்சி கதவு! உருட்டாமல் இருந்தால் சரி! செந்தில் பாலாஜி அட்டாக்!
அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் அலையக்கூடாது
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், "முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க வருவாய்த்துறை சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டது. பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்திற்கு மக்கள் அலையாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தாலுகா அலுவலகத்திற்கு வந்து மக்கள் அலையக் கூடாது என்பதால் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. முடிந்தளவு மக்கள் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும்.
கோவை மாவட்டத்தில்
வளர்ந்த நகரமான கோவை மாவட்டத்திற்கு நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பதோடு அதற்காக நிலங்களை எடுத்து கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுத்து விரைந்து நிலங்களை ஒதுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோவை மாவட்டத்தில் 6000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. தகுதி இருப்பவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
தாலுகா அலுவலகங்கள்
மேலும் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "கோவையில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆனால், 11 வட்டாட்சியர் அலுவலகங்கள் தான் உள்ளன. 4 லட்சம் பேருக்கு ஒரு தாலுகா அலுவலகம் உள்ளது. இதனால் பணி செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். குறிப்பிட்ட அளவிற்கு தாலுகா அலுவலகங்கள் அதிகரிக்கப்படும். வரும் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் தாலுகா அலுவகங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சண்டை கட்டி வாங்குகிறார்
கோவை மாவட்டத்தின் மீது முதலமைச்சருக்கு தனிப்பட்ட அக்கறை உள்ளது. எது கேட்டாலும் செய்து தருவார். அமைச்சர் செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருப்பது நல்ல காரியம். இப்பகுதி முன்னேற வேண்டும் என நினைக்கிறார். வருவாய் துறை ஆய்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனம் செலுத்துகிறார். புதிய ஆட்சியில் 25 ஆயிரத்து 150 பேருக்கு ஓஏபி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6000 பேருக்கு கொடுக்கிறோம். இந்த அமைச்சர் சண்டை கட்டி வாங்கிவிடுகிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
இ-சேவை மையம்
மேலும், இ-சேவை மையங்கள் குறைவாக இருப்பது உண்மைதான் எனவும், இ சேவை மையந்க்களில் சில தவறுகள் நடப்பதாக கவனத்திற்கு வந்துள்ளது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கேரளா அரசு தமிழகத்தில் சர்வே செய்ய வரும்போது தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் வரக்கூடாது என கேரள அரசுக்கு தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக இருக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.