கவுன்சிலர்கள் பாச்சா இனி பலிக்காது! செக் வைத்த அமைச்சர் கே.என்.நேரு! இனி அதிரடி ஆக்ஷன் தான்!
சென்னை: கவுன்சிலர்கள் தவறாக நடந்தால் அது யாராக இருந்தாலும் அவர்களது பதவி பறிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை தடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக கவுன்சிலர்கள் மீது எழுந்த புகார்களை தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

10 ஆண்டுகாலம்
கடந்த 10 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மக்களிடத்தில் அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்துவதற்காக தனது கனவுத் திட்டங்களை எல்லாம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக செயல்படுத்தி வருகிறார். மேலும் திமுக அரசு மீதான இமேஜை மக்கள் மத்தியில் உயர்த்துவதற்காக நிர்வாகத்தில் முடிந்தவரை வெளிப்படைத் தன்மையை கடைபிடித்து வருகிறார்.

கவுன்சிலர்கள்
இப்படி அவர் பல்வேறு காரியங்களை ஆற்றி வரும் நிலையில் எங்கோ யாரோ ஒரு சில கவுன்சிலர்கள் செய்யும் தவறால் அது ஒட்டுமொத்த கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயரை தேடி தந்துவிடுகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் தற்போது கவுன்சிலர்கள் தவறு செய்வது தெரியவந்தால் பதவியை பறிப்பதோடு கட்சியை விட்டு கட்டம் கட்டவும் தயாராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால் தான் அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கூட நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என எச்சரித்து அனுப்பினார்.

அமைச்சர் கே.என்.நேரு
இந்நிலையில் நகர்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் ஒரு முறை கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கவுன்சிலர்கள் தவறாக நடந்தால் அது யாராக இருந்தாலும் அவர்களது பதவி பறிக்கப்படும் என்றும் குறிப்பாக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை தடுக்கும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை உறுதி எனவும் எச்சரித்திருக்கிறார். அமைச்சரின் இந்த எச்சரிக்கை எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு மட்டுமல்ல ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் சேர்த்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் நம்பிக்கை
தவறு செய்யும் கவுன்சிலர்களின் பதவி பறிக்கப்படும் என போகிற போக்கில் தாம் சொல்லவில்லை என்றும் அதற்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும் அமைச்சர் நேரு கூறினார். மேலும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கின்ற சூழல் வராது என நம்பிக்கை உள்ளதாகவும் கவுன்சிலர்கள் தவறு செய்யாத வகையில் தாங்கள் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications