நீட் தேர்வில் தேர்ச்சி குறைய என்ன காரணம் தெரியுமா.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த புது விளக்கம்
சென்னை: இந்தாண்டு நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் யுஜி மற்றும் பிஜி மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ள போதிலும், இதுவரை விலக்கு கிடைக்கவில்லை.
இந்த ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து பல ஆயிரம் மாணவ- மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதினர்.

நீட்
இந்த நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு விழிப்புணர்வு இல்லாதது, போதிய பயிற்சி இல்லாதது என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

குடற்புழு நீக்க மாத்திரை
இந்தச் சூழலில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். இந்த வாரம் முழுக்க தேசிய குடற்புழு நீக்க வாரம் அணுசரிக்கப்படும் நிலையில், மாநிலத்தில் 30 வயது வரை இருக்கும் கருவுறாத பெண்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயா் பிரியா கலந்து கொண்டனர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "இந்தத் திட்டம் தேசிய அளவில் 2015 முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சியில் கடந்த 2010 ஆண்டு முதலே குடற்புழு நீக்க மாத்திரையை நாங்கள் வழங்கி வருகிறோம். மாநிலத்தில் மொத்தம் 2.66 கோடி பேருக்குக் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குகிறோம். இதில் விடுபட்டவர்களுக்கு வரும் 16ஆம் மாத்திரை வழங்கப்படும்.

நீட் தேர்வு
நீட் முடிவுகளைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டில் தேர்ச்சி சதவிகிதம் பெரியளவில் குறையவில்லை. கடந்த ஆண்டு 54 சதவீதமாகத் தேர்ச்சி சதவிகிதம் இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதியதால் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்துள்ளது. இந்தாண்டு 1.32 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 67 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

குறையவில்லை
அதாவது நீட் தேர்ச்சி விகிதம் 51.29%ஆக உள்ளது. நீட் தேர்ச்சி விகிதம் ரொம்ப எல்லாம் குறையவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவே தொடர்ந்து முயன்று வருகிறோம். மிக விரைவில் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

வேக்சின்
தமிழ்நாட்டில் கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூஸ்டர் டோஸ் போடாத பொதுமக்கள் விரைவாக பூஸ்டர் டோஸ் வேக்சின்களை போட்டுக் கொள்ள வேண்டும். வரும் 30ஆம் தேதிக்குள் பூஸ்டர் டோஸ் போடாவிட்டால், அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் போட ரூ.386.25 செலுத்த வேண்டியிருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications