காரில் ஏறுங்க! சாலை ஓரமிருந்த முதியவரை அழைத்த மா.சு! அடுத்து நடந்த நெகிழ்ச்சி! வாழ்க்கையே மாறிடுச்சே
சென்னை: சென்னையில் சாலையோரத்தில் பேப்பர் சேகரித்த நபர், அவ்வழியாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை பார்த்து தனது கஷ்டமான சூழலை தெரிவித்த நிலையில் அவரை தனது காரிலேயே அழைத்து சென்ற அமைச்சர், அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியை வழங்கியுள்ளார்.
திருச்சியை சேர்ந்தவர் ராஜா. இவர் தினந்தோறும் சாலையோரங்களில் பேப்பர்கள், பிளாஸ்டிக், அட்டைகள் உள்ளிட்டவைகளை சேகரித்து, அதை காயலான் கடையில் எடை போட்டு அதில் கிடைக்கும் மிகவும் சொற்ப வருமானத்தில் தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கென வீடு வாசல் எல்லாம் இல்லை. கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டுவிட்டு சாலையோரத்தில் படுத்து உறங்கியுள்ளார். இந்த நிலையில் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்ள கிண்டிக்கு சென்றார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அப்போது சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துக் கொண்டிருந்தார் ராஜா.
திடீரென யாரோ வேக வேகமாக நடந்து வருவதை பார்த்த ராஜாவுக்கு அதிர்ச்சி! அந்த வழியாக அமைச்சர் வருகிறாரே என பூரிப்பில் அவரை பார்த்து வணக்கம் சார் என்றார். உடனே நடைப்பயிற்சியை நிறுத்திய மா.சுப்பிரமணியன், அவரிடம் நலம் விசாரித்துவிட்டு, எந்த ஊர், என்ன செய்றீங்க, என்ன ஊதியம் கிடைக்கும், பிழைப்பு சரியாக போகிறதா என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர் தினமும் கால் வயிறு அதற்கும் கீழ்தான். சில நேரங்களில் அது கூட கிடையாது. இரவில் தூங்குவதற்கு சாலையோர பிளாட்பார்ம்களில் தங்குவேன் என தெரிவித்துள்ளார். இதை கேட்ட மா.சுப்பிரமணியன், நான் வேலை கொடுத்தால் செய்வீர்களா என கேட்டுள்ளார். நிச்சயம் செய்கிறேன் என ராஜா சொன்னார்.
உடனே தனது பி.ஏ.விடம் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தனது காரிலேயே அழைத்து செல்ல கூறி அவருக்கு புதிய உடைகளை கொடுத்து குளிக்கச் சொல்லி பிறகு கலைஞர் மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் பணியை வாங்கி கொடுத்தார்.
அவருக்கு இதன் மூலம் மாதம் ஊதியமாக ரூ 12 ஆயிரம் வழங்கப்படும். இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று காலை நடைபயிற்சி முடித்து வந்துகொண்டிருந்த போது சாலை ஓரத்தில் பேப்பர் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சேகரித்துக்கொண்டிருந்த ஒருவர் நம்மை அடையாளங்கண்டு வணக்கம் சொன்னார்.அவர் குறித்து விசாரித்ததில் திருச்சியை சார்ந்த ராஜா என்பதும், அவர் தினந்தோறும் இப்பணியை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் அரைகுறையாக உண்டு சாலையோரங்களில் படுத்துறங்கும் ஆதரவற்ற தோழர் என்பதும் தெரியவந்தது.
அவரை நமது தொழிலாளர் குடியிருப்பு இல்லத்தில் குளிக்கவைத்து மாற்று ஆடைகளை தந்து உடுக்கவும் வைத்து கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அவரின் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைகளும், வாழ்வாதாரத்திற்கு தற்காலிக பணி ஒன்றும் வழங்க நடவடிகை எடுக்கப்பட்டது. இவ்வாறு மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நேற்று வரை சாலையில் பேப்பர் கழிவுகளை சேகரித்து வந்த இந்த நபரின் வாழ்க்கை ஒரே ஒரு வணக்கத்தால் மாறியது என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் நிறைய மக்களின் குறைகளை மா.சுப்பிரமணியன் தீர்த்து வைத்திருக்கிறார். மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்குரிய சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications