நான் உயிரோடு இருக்க காரணம் முதல்வர் ஸ்டாலின்தான்.. பிளாஷ்பேக் சொல்லி அமைச்சர் மா.சு. உருக்கம்!
சென்னை: நான் உயிரோடு இருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உருக்கமாக தெரிவித்தார்.
சென்னை திநகரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் "ஜெயித்துக் காட்டுவோம் வா" எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுடன்கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன்.

10 ஆம் வகுப்பு
இதனால் எனது பெற்றோர் என்னை 10 ஆம் வகுப்பு வரைதான் படிக்க வைத்தார்கள் . ஆனால் எனக்கோ மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் பிறந்தன. அவர்களை படிக்க வைத்த போது நானும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பிஏ படித்து பட்டம் பெற்றேன்.

பத்தாம் வகுப்பு
இதையடுத்து பெங்களூருவில் எல்.எல்.பி படித்தேன். பத்தாம் வகுப்போடு எனது கல்வி முடிந்துவிட்டது என நான் நினைத்திருந்தால் எனது பெயருக்குப் பின்னால் எல்எல்பி வந்திருக்காது. இதனால் மாணவர்கள் எப்போதும் மனம் தளர்ந்துவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொள்ள வேண்டும்.

கால் எலும்புமுறிவு
2004 ஆம் ஆண்டு எனது கார் விபத்தில் சிக்கியது. இந்த காரில் என்னுடன் பயணம் செய்த ஜம்புலிங்கம் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் எனது கால் எலும்பு முறிந்த நிலையில் நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இதை அறிந்த திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடனே மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவமனைக்கு வந்த ஸ்டாலின்
அங்கு மருத்துவர்களை சந்தித்த ஸ்டாலின், எனது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் எப்படியாவது பிழைக்க வேண்டும். அதற்கு மருத்துவர்கள உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அன்புதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

கால் முறிந்தது
கால் முறிந்ததற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மருத்துவர்களோ என்னால் இனி நடக்க முடியாது, சம்மணமிட்டு அமர முடியாது என கூறினர். ஆனால் நானோ இதையெல்லாம் கண்டு அச்சமடையாமல் படிப்படியாக பயிற்சிகளைச் செய்து மருத்துவர்கள் முன்பே சம்மணமிட்டு உட்கார்ந்து காண்பித்தேன்.

சாதிக்கலாம்
இந்த விபத்தை அடுத்து தற்போது வரை 131 மாரத்தான் போட்டிகளில் ஓடியுள்ளேன், இந்திய ஆசிய சாதனைகளைப் புரிந்துள்ளேன். என்னால் முடியாது என நினைத்திருந்தால் படித்திருக்கவும் முடியாது, மாரத்தானில் சாதனை படைத்திருக்கவும் முடியாது. எனவே தேர்வுகள், தோல்விகளுக்கு பிறகு வாழ்க்கையே முடிந்து விட்டது என மாணவர்கள் நினைத்துவிடக் கூடாது என மாணவர்களுக்கு மிகவும் அழகாக அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications