பள்ளிகள் திறப்பு.. மாணவர்களிடையே அதிகரிக்கும் கொரோனா.. அமைச்சர் மா.சு சொல்லும் அதிமுக்கிய தகவல் என்ன
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ள மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உள்ளது என்றும் மக்களுக்குச் செலுத்தத் தடுப்பூசிதான் போதியளவு இல்லை என்றும் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உள்ளது என்றும் மக்களுக்குச் செலுத்தத் தடுப்பூசிதான் போதிய அளவு இல்லை என்றும் தெரிவித்தார்.
தடுப்பூசி முகாம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் இருபதாயிரம் முகாம்களில், 15 லட்சம் பேருக்குத் தடுப்பூசி என்ற இலக்குடன் மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 18 வயது பூர்த்தியானவர்களுக்கு 67 சதவீதம் பேருக்கு முதல் தவணையாக 13 லட்சத்து 86 ஆயிரத்து 891 பேருக்கும், இரண்டாவது தவணையாக 2 லட்சத்து 72 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் தடுப்பூசி
இந்திய அளவிலான தடுப்பூசி போடும் பணியைக் காட்டிலும் கூடுதலான தடுப்பூசிகளைத் திருப்பூர் மாவட்டத்தில் செலுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 67 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தவணை தடுப்பூசி 13 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாநிலத்தில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குச் செலுத்தப்பட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் முதலிடம்
தமிழகத்தில் 56 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மற்றும் தமிழக எண்ணிக்கையைக் காட்டிலும் திருப்பூர் மாவட்டத்தில் கூடுதலாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் கூடுதலாகத் தடுப்பூசிகளைப் போட்டதில் முதலிடம் வகிக்கிறது. ஒரு தடுப்பூசி பேட்ஜில் வேஸ்டேஜை கணக்கில் கொண்டு கூடுதலாக அனுப்பப்படும் தடுப்பூசி மருந்தை சாதுரியமாகச் செலுத்தியதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா
திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட தொற்றால் எவ்வித மோசமான பாதிப்பும் இல்லை. மாணவர்கள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வரும் நேரத்தில் அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. தற்போது தட்டுப்பாடு காரணமாக முதல் தவணை கோவாக்சின் எங்கும் செலுத்தப்படுவதில்லை. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உள்ளது. மக்களுக்குச் செலுத்தத் தடுப்பூசிதான் போதிய அளவு இல்லை. இதைச் சரி செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
தடுப்பூசி பணிகள்
கொரோனா வேக்சின் குறித்து பொதுமக்களிடையே முதலில் தயக்கம் இருந்தது. இருப்பினும், 2ஆம் அலைக்கு பின்னர், மக்களிடையே இருந்து தயக்கம் மெல்ல விலகியது. அதன் பின்னரே அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்ட தொடங்கினர். அதேபோல கடந்த காலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை அதிகமாக இருந்தது. அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரே சீரானது. இப்போது மாநிலத்தில் வேக்சின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.