கிராமத்து டீக்கடையில் மா.சு. தடுப்பூசி போட்டீங்களா.. அக்கறையுடன் விசாரிப்பு.. வாக்கிங் போன போது சபாஷ்
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எந்த ஊரில் இருந்தாலும் நடைபயிற்சியை விடமாட்டார். அந்த வகையில் த.செங்கமேடு கிராமத்தில் இருந்த மா.சுப்பிரமணியன் காலையிலேயே நடைபயிற்சிக்கு சென்றார். ஆனால் அந்த நேரத்தில் நடைபயிற்சியை முடித்துவிட்டு வழக்கமான மனிதராக இல்லாமல், கிராம மக்களோடு உட்கார்ந்து டீ குடித்தபடி, தடுப்பூசி எல்லாரும் போட்டீங்களா என்று அக்கறையோடு விசாரித்தார்,.
Recommended Video
டீக்கடையில் இருந்தவர்களுக்கு மா.சுப்பிரமணியன் அமைச்சர் என்றே தெரியாத நிலையில், அவர்கள் தாங்கள் தடுப்பூசி போட்டதை கூறியதுடன், தன் குடும்பத்தினரும் போட்டுக்கொண்டதாக கூறினார்கள். மக்களிடம் அப்போது தடுப்பூசி போடுவது நல்லது என்பதை எடுத்துரைத்துவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டங்கள் தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அரசின் தொடர் ஊரடங்கு, தடுப்பூசி முகாம், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வு ஆகியவற்றின் காரணமாக கொரோனா தொற்றுகளின் பாதிப்பு தமிழகத்தில் தற்போது குறைந்துள்ளது.

டீக்கடையில் மா.சு
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து அதிகாலையில் கிராமம் ஒன்றில் டீ குடித்தபடி மக்களிடம் கேட்டறிந்துள்ளார் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன். அவர் எந்த நாட்டில், எந்த ஊரில் இருந்தாலும் அதிகாலையில் நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

டீக்கடையில் அமைச்சர்
நேற்றைய தினமும் அதிகாலையில் தனது நடைபயிற்சியை தொடங்கிய அவர் த.செங்கமேடு என்னும் கிராமத்திற்கு சென்றார் அங்குள்ள டீக்கடையில் உட்கார்ந்தபடியே ஊர்மக்களிடம் தடுப்பூசி நிலவரம் குறித்து பேசினார் அப்போது கடையில் அமர்ந்திருக்கும் பெரியவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், ஊர் மக்களில் பெரும்பாலோனார் ஊசி செலுத்தி கொண்டனர் என்று கூறுகிறார்.

என்ன நினைக்கிறார்கள்
கடைக்கு வரும் மற்றவர்களிடமும் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்? தடுப்பூசியை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் எதார்த்தமாக கேட்கிறார் அதற்கு பதிலளித்த அந்த பெரியவர் மக்களின் பாதுகாப்புக்காக தான் அரசு ஊசி போட அழைக்கிறது. அதன்படி நாங்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்கிறோம் என்று அந்த பெரியவர் பதிலளிக்கிறார்.

வீடியோ வைரல்
கிராமம் ஒன்றில் டீக்கடை ஒன்றில் எளிமையாக ஒரு பெஞ்சில் அமர்ந்தபடி பேசும் மா. சுப்பிரமணியன் அமைச்சர் என்று தெரியாமல் அந்த பெரியவர் பேசுவது அந்த வீடியோவில் மிக நன்றாக தெரிகிறது. அதேபோன்று கடைக்கு வரும் மற்றவர்களும் தடுப்பூசி போட்டு கொண்டோம் என்று கூறுவது மக்களிடம் தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. அமைச்சர் மா. சுப்பிரமணியத்தின் இந்த அதிகாலை வாக்கிங் பிளஸ் கொரோனா தடுப்பூசி நிலவரம் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு அமைச்சர் என்பவர் காலையில் வாக்கிங் போனால் அப்படியே வீட்டுக்கு சென்றுவிடலாம். ஆனால் மக்களுடன் மக்களாய் அமர்ந்து டீ குடித்துவிட்டு, அவர்களில் ஒருவரை போல் அமர்ந்து அக்கறையுடன் தடுப்பூசி குறித்து விசாரித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications