10% இடஒதுக்கீடு விவகாரம்.. ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர் ஏழையா? இறங்கி அடிக்கும் பிடிஆர்!
சென்னை: இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான சில கோடி மக்கள் மட்டுமே ஊதியம் பெற்று வரும் நிலையில், ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர் ஏழையா என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று திமுக அறிவித்தது.
இதனிடையே 10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்படி 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.
பாஜகவுக்கு எதிராக ஓபிஎஸ்.. 10% இடஒதுக்கீடு.. தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்!
பாஜக ஆதரவு
அதேபோல் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் திமுக பிராமண எதிர்ப்பை வைத்து அரசியல் செய்வதாகவும் தமிழக பாஜக தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஓபிஎஸ், 10% இடஒதுக்கீட்டு எதிராக தமிழக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1.7 கோடி மக்கள்
இதுகுறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், இந்தியாவில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் வரி கட்டி வருகிறார்கள். சுமார் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவில், 1.7 கோடி மக்கள் மட்டுமே சாதாரணமாக ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். ஆனால் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு ரூ.8 லட்சத்திற்கு கீழ் ஊதியம் வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏழைகளா?
அப்போது ரூ.8 லட்சத்திற்கு கீழ் ஊதியம் ஈட்டுபவர்கள் எப்படி ஏழைகளாக இருப்பார்கள். இடஒதுக்கீடு என்பது சாதி ரீதியாக கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டது. சாதி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறிய வகுப்பில் உள்ள மாணவரையும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த மாணவரையும் எப்படி ஒரே இடத்தில் வைத்து பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
பொருளாதாரம்
தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் சமூகநீதி. பொருளாதாரத்தில் சராசரியை விடவும் 5 மடங்கு அதிகம் சம்பாதித்தாலும், 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார சூழ்நிலை என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது. அதனால் பொருளாதார ரீதியாக வழங்கப்படும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.