"எந்த அண்ணாமலை? அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும்.." அமைச்சர் சேகர்பாபு தடாலடி
சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறிய அந்த கட்சி தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
Recommended Video
அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும். அதன்பிறகு சித்தப்பா என்று அழைக்கலாம் என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் திருப்பூரில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமையும் என்று உறுதியாக தெரிவித்தார்.
கெட்டதிலும் ஒரு நல்லது.. டெல்டாவை காலி செய்யும் ஓமிக்ரான்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் குட் நியூஸ்!
அண்ணாமலை பேச்சு
அண்ணாமலை பேசுகையில், பாஜகவில் பதினெட்டு கோடி பேர் உறுப்பினராக உள்ளனர். தமிழகத்திலிருந்து பல மத்திய அமைச்சர்களை பாஜக உருவாக்கியிருக்கிறது. நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்களை உருவாக்கி இருக்கிறோம். 2026ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதி என்று தெரிவித்தார்.
எந்த அண்ணாமலை?
இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம், அண்ணாமலை இவ்வாறு கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, எந்த அண்ணாமலை என்று நிருபர்களிடம் பதில் கேள்வியெழுப்பினார் சேகர்பாபு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று நிருபர்கள் மீண்டும் தெரிவித்தனர். இதையடுத்து பதிலளித்த சேகர்பாபு, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அதன்பிறகு சித்தப்பா என்று அழைக்கலாம் என்று தெரிவித்தார். அதாவது அப்படி ஒன்று நடந்தால் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்று கிண்டலாக தெரிவித்தார் சேகர்பாபு.
திராவிடர் மண்
மேலும் அவர் கூறுகையில், இது பெரியார் மண், திராவிட மண், இங்கு திமுகதான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்பதற்கு, உதயநிதி ஸ்டாலின் தோளோடு தோள் கொடுப்பார். இவ்வாறு சேகர்பாபு தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது நாற்பத்தி நான்காவது பிறந்தநாளை கொண்டாடினார். மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், ஆடம்பரமாக தனது பிறந்தநாளை கொண்டாட கூடாது என்று அவர் தொண்டர்களை கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கிணங்க நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்தான் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு இவ்வாறு தெரிவித்தார்.