கருணாநிதி சிலை மீது கை வைத்தால்.. எங்கள் கை பூப்பறிக்குமா.. சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கேள்வி
கருணாநிதி சிலையை உடைப்பேன் என கூறிய சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி
சென்னை: கருணாநிதி சிலை மீது கை வைத்தால், எங்கள் கை பூப்பறிக்குமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய சேவையை பாராட்டி சென்னை மெரினா கடற்கரையையொட்டி பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சுமார் ரூ. 81 கோடி மதிப்பில் இந்த பேனா சிலை அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையின் ஒரு பகுதியில் மணல் குவித்து அதில் பேனா நடப்படுகிறது. கடற்கரையில் சிலை வைப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து என சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அண்டிப்பிழைத்த புழுக்கள்.. கருணாநிதி நினைவு சின்ன நிழல் மீது கை வைத்தால் கூட.. டிஆர்பி ராஜா ஆவேசம்!
மாசு கட்டுப்பாட்டு வாரியம்
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்பு கூட்டத்தை நேற்றைய தினம் நடத்தியது. கலைவாணர் அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை வைப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்திய மீனவர்கள் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்திருந்தது.
முகிலன் பேச்சு
இந்த கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் பேசும் போது கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை பேசவிடாமல் திமுகவினர் சலசலப்பில் ஈடுபட்டனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் சமாதானப்படுத்தினார். எனினும் தன்னை குறைந்த அளவு நேரத்தில் பேச வைத்ததாக கூறி முகிலன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
சீமான் பேச்சு
இதையடுத்து அவரை போலீஸார் வெளியேற்றினர். இதையடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கடலில் 8551.13 சதுர மீட்டரை நீங்கள் எடுக்கிறீர்கள். அதில் பேனா வைக்க வேண்டும் என்றால் கல்லைக் கொட்ட வேண்டும். மண்ணைக் கொட்ட வேண்டும். இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அங்கிருக்கும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்.
கடற்கரையில் புதைக்கப்பட்டதே தவறு- சீமான்
கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு, இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேண்டுமென்றால் அறிவாலயத்தில் போய் வையுங்கள், நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே அங்கே வையுங்கள். கடலுக்குள்தான் வைப்பார்களாம். இந்த சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும். சும்மாவே மீனவ சங்கம் என்ற பெயரில் அகில இந்திய மீனவ சங்கம், அனைத்து மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்து சிலை வைப்பதால் ஒரு ஆபத்தும் இல்லை என எதையாவது பேசிக்கிட்டு இருக்காங்க. நீங்கள் பேனா வையுங்கள், ஒரு நாள் அதை நான் உடைப்பேன்.
81 கோடி பணம் எங்கிருந்து வந்தது
பள்ளிக் கூடத்தை சீரமைக்க காசு இல்லை என்கிறீர்கள், ஆனால் பேனா வைக்க மட்டும் காசு எங்கிருந்து வருகிறது? என கூறிவிட்டு அங்கு திமுகவினர் கூச்சலிட்டதால் அவர் வெளியேறினார், பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏற்கிறோம். ஆனால் கடலுக்குள் வைக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை.
திருவள்ளுவர் சிலை
குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை பற்றி பேசுகிறார்கள். அந்த சிலை அங்கு ஏற்கெனவே இருந்த பாறையில் வைக்கப்பட்டது. ஆனால் பேனா சிலை வைப்பது அப்படியில்லை, கடலில் கல்லையும் மண்ணையும் கொட்டி அதன் மேல் நடுவது, இதை சுற்றி பார்க்கிறேன் என்ற பெயரில் யாராவது வந்து பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் வீசிவிட்டு சென்றால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடியும் என்றார்.
அமைச்சர் சேகர்பாபு
இந்த நிலையில் சீமானின் இந்த கருத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு பேசுகையில் கருணாநிதியின் பேனா சிலையை சீமான் உடைக்கும் வரை எங்கள் கை பூப்பறிக்குமா, இவருக்கு மட்டும்தான் கை இருக்கிறதா, எங்களுக்கு கை இல்லையா என கேள்வி எழுப்பினார். அப்போது மீண்டும் சீமானுக்கு உங்கள் பதில் என்ன என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சேகர் பாபு இந்த பதிலே போதும் என்றார்.