வெள்ளம் சூழும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. அதிமுக ஆட்சியில் நடந்த தவறு.. சேகர்பாபு குற்றச்சாட்டு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிலும் புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 317 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல், கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு பயணிக்கும் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பேருந்து மூலம் பயணம் செய்பவர்கள் சென்னைக்கு வருகை தந்தால் கோயம்பேட்டில் உள்ள பேருந்து முனையத்தை மட்டுமே நாடி இருக்கவேண்டிய நிலை இருந்தது. இதனால் சென்னையின் புறநகரில் வசித்து வரும் பயணிகளுக்கு பேருந்து முனையத்திற்கு பயணம் செய்வதே சவாலாக இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சென்னையில் அடுத்த பெரிய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது. இங்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் புதிய புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிட்டபடி 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறந்து இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் தை பொங்கலுக்கு திறக்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் சேகர்பாபு கூறினார். அடுத்தடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வந்தன.
பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக கிளாம்பாக்க பேருந்து நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்னும் 2 பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
தினந்தோறும் 1.5 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 200 பஸ்கள் 270 கார்கள் மற்றும் 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துவிட்டது.
அதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளது இதற்காக தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 99 சதவீதம் பணி முடிவடைந்து உள்ளது.
இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு பெய்த மழையால் வெள்ளத்தில் தத்தளித்தது கிளாம்பாக்கம் பேருந்து முனையம். கிளாம்பாக்கத்தை சுற்றி இருந்த பகுதிகளிலும் வெள்ளநீரில் தத்தளித்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய மழைநீர் வடிகால் பணிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இப்போதைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று புதிய பேருந்து நிலையம் குறித்து தகவல் ஒன்றை கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு , "மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல், கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 317 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏதுவாக, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், முன் அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications