தொடரும் சேகர்பாபுவின் அதிரடி..கோயில் இடத்தில் குயின்ஸ்லாண்ட்.. 177ஏக்கர் நிலத்தை மீட்க செம நடவடிக்கை
சென்னை: குயின்ஸ்லாண்ட் தீம் பார்க் ஆக்கிரமித்துள்ள 177 ஏக்கர் நிலம் குறித்து சட்டப் போராட்டம் நடத்தி, அது கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சேகர்பாபு பேச்சு
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ''கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்புகளில் ஐந்து அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொட்டை அடிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும்.

நகைகள்
இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும். திருக்கோயில்கள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மண்டலத்திற்கு நீதியரசர் ராஜூ, மதுரை மண்டலத்திற்கு நீதிபதி செல்வி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்திற்கு நீதியரசர் ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கித் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில், கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். காணாமல் போன சிலைகளை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குயின்ஸ்லாண்ட் தீம் பார்க்
சென்னை லயோலா கல்லூரி இடம் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் இல்லை. குயின்ஸ்லாண்ட் தீம் பார்க் அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் வட்டம், அருள்மிகு காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி திருக்கோயிலுக்கு சமுத்திரமேடு கிராமத்தைச் சார்ந்த உதயகிரி சாமைய்ய ஜமின்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர் திருக்கோயிலின் பூஜை மற்றும் பராமரிப்பு பணியைத் தொடர்ந்து நடத்துவதற்குச் சொத்துகளை உயில் சாசன ஆவணம் எழுதிப் பதிவு செய்துள்ளார்.

சட்டப் போராட்டம்
அதன் பின்பு பல்வேறு காரணங்களால் சில நபர்கள் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன்மீது இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப் போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications