தமிழகத்தில் கோயில் திறப்பு கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும்? அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்
சென்னை: உடல்நிலை சரியில்லாத போது கசப்பு மருந்து எடுத்துக் கொள்வது போலத்தான் கொரோனா கட்டுப்பாடுகள் என்று கூறிய அமைச்சர் சேகர்பாபு, கொரோனா அபாய கட்டத்தைக் கடந்தவுடன் வழிபாட்டிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் திருமண நாளில் கோயில்களின் முன்புறம் கூட்டம் கூடுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கொரோனா அபாய கட்டத்தைக் கடந்தவுடன் வழிபாட்டிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏகாம்பரநாதர் திருக்கோயில் பள்ளி
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறுகையில், "ஏற்கனவே இங்கு ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே செயல்பட்டு வந்த தனியார்ப் பள்ளி மூடப்பட்டதைத் தொடர்ந்து 600க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்கள், பணியாளர்கள் என 57 பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இது முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 100 ஆண்டுக்கால பழமையான இந்த பள்ளியில் தினக்கூலி செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளே பயில்கின்றனர். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி இந்த பள்ளி செயல்படத் தொடங்கும்.

கோயில் திறப்பு எப்போது
கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. திருமண விழாக்களும், கடவுள் வழிபாடும் இன்றியமையாத ஒன்றுதான் என்றாலும் பாதுகாப்பு நடைமுறைகள் அதைக்காட்டிலும் முக்கியம். கொரோனா மூன்றாம் அலை அச்சம் இருப்பதால், அந்த அபாயக் கட்டத்தைக் கடந்த பின்னரே கோயில் திறப்பிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

கோயில் முன் கூட்டம்
கோயில்களின் வெளியில் நின்று திருமணம் செய்து கொள்வது என்பது உணர்வு சார்ந்தது. குறிப்பிட்ட சன்னிதானத்தில்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் முன்பே முடிவு செய்திருப்பர். கோயில்களின் முன்புறம் திருமண விழாக்களில் கூட்டம் கூடுவதை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கசப்பு மருந்து
நான் சனிக்கிழமைதோறும் பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்வேன். பெரியபாளையம் , மாங்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கும் வாரம்தோறும் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாகக் கோயிலுக்குச் செல்லவில்லை. ஆடி மாத திருவிழாக்கள் பல கோயில்களில் இன்னும் முடியவில்லை. உடல் நிலை சரியில்லை என்றால் கசப்பு மருந்து எடுத்துக் கொள்வதைப் போலத்தான் கொரானா கட்டுப்பாடுகள்.

அறநிலையத்துறை கல்லூரிகள்
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புதிய கல்லூரிகளைத் திறப்பது தொடர்பாகச் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும். கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது" என்று கூறினார்.

கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த மே மாதம் கொரோனா உச்சமடைந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் தமிழ்நாட்டில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தியோட்டர் திறப்பு, பள்ளிகள் திறப்பு என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், கோயில்களைத் திறக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் கூடுதலாக எவ்வித தளர்வும் அறிவிக்க்பபடவி்லலை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications