தங்க நகை அடமானம்! புதிய விதிகளால் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கிய ஆர்பிஐ
சென்னை: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் ரிசர்வ் வங்கி இடியை இறக்கியதாக தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்க நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்க புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக் கடன் வழங்கப்படும். எடுக்காட்டாக நகையின் மதிப்பு ரூ 100 என்றால் ரூ 75 வரை கடன் வழங்கபபடும்.
தங்க நகைக் கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். தங்க நகையின் தூய்மைத் தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைக் கடன் வழங்கப்படும்.
நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். வெள்ளி நகைகளுக்கும் நகைக் கடன் வழங்கலாம். தனிநபர்கள் ஒரு கிலோ தங்கம் வரை மட்டுமே அடகு வைத்து நகைக் கடன் பெற முடியும். நகைக் கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம் பெற்றிருக்க வேண்டும்.
நகைக் கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் (7 working days) நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கிகள் ஒரு நாளைக்கு தலா ரூ 5 ஆயிரம் அபராதமாக கொடுக்க வேண்டும் என ஆர்பிஐ விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications