இந்த விஷயத்தை பற்றி பேசவே கூடாது.. எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு ஹைகோர்ட் கடும் எச்சரிக்கை
சென்னை: கோடநாடு விவகாரம் பற்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினோ பேசக்கூடாது என ஹைகோர்ட் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேசிவந்தார். இதையடுத்து, ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் பதிலுக்கு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தார். ஆனால், பிறகும், கோடநாடு சம்பவம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி, அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி கூடுதல் மனுவை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தொடர்ந்து இப்படி பேச வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அப்படியே பேசினால் அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஸ்டாலின் தனது குற்றச்சாட்டை நிறுத்தவில்லை,
கோடநாடு சம்பவம் குறித்து தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து ஸ்டாலின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.
காங். வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின்பேரிலேயே என்னை மிரட்டினர்.. கரூர் கலெக்டர் விளக்கம்
இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கோடநாடு விவகாரம் பற்றி பேசக்கூடாது என தெரிவிதித்திருந்தேன். வழக்கு விசாரணையைப் பாதிக்கும் என்பதால்தான் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தேன். எனவே உதகை நீதிமன்றத்தில், அந்த வழக்கு முடியும்வரை இதுகுறித்து ஸ்டாலின் தரப்போ, முதல்வர் பழனிசாமி தரப்போ பொதுவெளியில் பேசக்கூடாது. தொடர்ந்து பேசினால், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுவது போல் கருதப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே இன்று மாலை 5 மணியுடன், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.