இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும்.. கமல்ஹாசனிடம் இருந்து பாராட்டை பெற்ற ஸ்டாலின் அரசு
சென்னை : அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என்ற குரல் 1960களில் தொடங்கியது. 1970களில் வீரியம் பெற்ற நிலையில். 2021ல் தான் தமிழகத்தில் நிறைவேறி உள்ளது.
பெரியார், கருணாநிதி என்று பலரும் குரல் கொடுத்த அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்களுக்கு பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 24 பேர் உட்பட 58 பேரை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி நியமித்தது.

அர்ச்சகர்கள் பதவியேற்பு
இவர்களில் 24 பேர், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் இந்து அறநிலையத்துறை நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று, பணி வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள். இவர்களில் ஐந்து பேர் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆகஸ்ட் 14ம் தேதி பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் சுதந்திர தினத்தன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோயில்களில் பணியேற்றுக் கொண்டார்கள்.

திமுக அரசின் முடிவு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என்ற அரசின் முடிவிற்கு பாஜக, விசிக உள்பட பல்வேறு கட்சிகள், சமூக நல அமைப்புகள் பாராட்டி உள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முடிவை பாராட்டி உள்ளார்,

பாராட்டுக்கள்
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என்றார்.

சுமந்தி சி ராமன்
முன்னதாக , பல்வேறு கோயில்களில் புதிதாகச் சேர்ந்த அர்ச்சகர்கள் முன்பு பணியாற்றிவந்த பிராமண அர்ச்சகர்களை துரத்தியதாகவும் அவர்கள் கண்ணீருடன் கதறியபடி வெளியேறியதாகவும் ட்விட்டரில் பலர் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் போன்றோர், "பல ஆண்டுகளாகப் பணியாற்றியவர்களை கோயில்களைவிட்டு வெளியேற்றியது தவறு," என்று கூறினார். பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக நீதிமன்றத்திற்குச் செல்லப்போவதாக ட்விட்டரில் பதிவிட்டார்.

பொய் தகவல்
ஆனால் உண்மை நிலவரத்தை விவரித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் உத்தரவிட்டார். அதற்குப் பிறகு, 216 காலிப் பணியிடங்களுக்கான பணி ஆணை கடந்த 14ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில் 58 பேர் திருக்கோயில்களில் அர்ச்சகர் நிலை 2ல் காலியாக இருந்த பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். ஆனால், ஒரு சிலர் விஷமத்தனமான செய்திகளோடு, யாரும் உயர்நிலைக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தோடு பிரசாரங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அரசுக்கு எதிராக சதி
அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் கூட 70, 72 வயது ஆன பிறகும் அர்ச்சகர்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்களும் பெரிய கோயில்களின் துணைக் கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்ற தொடர்ந்து அனுமதிப்படுகிறார்கள் . இந்து சமய அறநிலையைத் துறையைப் பொறுத்தவரை, பட்டாச்சார்யார்களையோ, அர்ச்சகர்களையோ திருக்கோயில்களில் இருந்து வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை. ஒரு சில ஊடகங்களும் ஒரு சில ஃபேஸ்புக் பதிவர்களும், எங்கள் அரசை ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசைப் போல சித்தரிக்க நினைக்கிறார்கள்.

மௌனப்புரட்சி
அரசியல் களத்தில் இந்துத்துவாவைக் கையில் எடுத்தவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது என்ற காரணத்தினால், இந்த அர்ச்சகர் நியமன பிரச்சனையைக் கையில் எடுத்திருப்பதாகக் கூறிய சேகர் பாபு, ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரு பெரிய மௌனப் புரட்சியை மு.க. ஸ்டாலின் செய்திருக்கிறார். 58 அர்ச்சகர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதால் எங்காவது யாராவது பணிவாய்ப்பு இழந்திருந்தால் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும். கடந்த பத்தாண்டுகளில் அர்ச்சகர் பணியிடங்களிலோ, கோயில்களில் உள்ள நிரந்தரப் பணியிடங்களிலோ யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை" இவ்வறு சேகர் பாபு விளக்கம் அளித்தார்,












Click it and Unblock the Notifications