லோக்சபா தேர்தலில் கமல் போட்டியிடுவாரா, மாட்டாரா.. கடலூர் பேச்சு சொல்வதென்ன
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் கவனம் செலுத்த விரும்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அவர் சொல்வதை பார்த்தால் எம்பி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே தெரிகிறது.
மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே கமல்ஹாசனின் கவனம் முழுவதும் தமிழகத்தை சுற்றி சுற்றிதான் வந்தது. கட்சி ஆரம்பித்தும்கூட தமிழக அரசியலைத்தான் நோண்டி நுங்கெடுத்தாரே தவிர டெல்லி பக்கம் கவனமே போகவில்லை.
ஆனால் காங்கிரசில் ராகுல் மீதும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் டெல்லியிலும் கமல் தலை காட்டினார். இதைவைத்து கமல் வரப்போகிற எம்பி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பார் என்றும் பேசப்பட்டது. காங்கிரஸ், கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட்கள் என்று இவர்களுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
மக்களவை தேர்தல்
ஆனால் நேற்று கடலூரில் கமல் பேசிய பேச்சை பார்த்தால் எம்பி தேர்தலில் கமல் போட்டியிட மாட்டார் என்றே தெரிகிறது. கமல் பேசும்போது "மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டு வருகிறார்கள். எனது இப்போதைய நோக்கமெல்லாம் தமிழகம்தான்.
பொதுமக்கள் ஆதரவு
தமிழகம் முன்னேற்றப்பட்டால் இந்தியாவே திரும்பி பார்க்கும். மக்களை நோக்கி துப்பாக்கி ஏந்த வைத்தது அரசின் கோழைத்தனம். இதற்கு நாம் கேள்வி எழுப்பாததே காரணம். மக்கள் நீதி மய்யம் அமைப்பு ஊழலற்ற, மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டது. எனவே, இதற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.
யாருடனும் பேசவில்லை
இப்போதைய நோக்கம் எல்லாம் தமிழகம்தான் என்றால் எம்பி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கமல் ஆர்வம் காட்டவில்லையோ என தெரிகிறது. அதற்கேற்ற மாதிரி இதுவரை தமிழகத்தில் கமல் யாருடனும் கூட்டணி சம்பந்தமாக பேசவில்லை, கமலையும் யாரும் நெருங்கி வந்து பேசவில்லை.
எம்பி தேர்தல்
மாநில அரசு மீது குறை, குறையாக சொல்லும் கமல், மத்திய அரசை ஒருமுறை கூட விமர்சித்து கருத்து சொல்லவில்லை என்று பகிரங்கமாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது எம்பி தேர்தலில் ஒதுங்கி நிற்க காரணம் தெரியவில்லை என்றாலும், சட்டமன்ற தேர்தலை அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.
அடித்தளம் வலுவாக்க திட்டம்
ஏனெனில் கமலின் அரசியல் கிராமங்களை முன்னிறுத்தியே பயணிக்க ஆரம்பித்தது. அதனால்தான் கிராம சபையை ஊர் ஊராக நடத்த ஆரம்பித்தார். எப்படியும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் மய்யம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது கமலுக்கு மைனசாக இருக்கிறது. உள்ளாட்சியிலிருந்து தனது அரசியல் அடித்தளத்தை வலுவாக்க விரும்பிய கமலின் விருப்பம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
செல்வாக்கு, பலம்
ஒருவேளை எம்பி தேர்தலில் மய்யம் போட்டியிட்டு, கமல் போட்டியிடவில்லை என்றால் அவர் சட்டசபைத் தேர்தலில் வலுவான தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருக்கலாம். மேலும் தனித்து நிற்கும் முடிவுக்கும் கமல் வரக் கூடும். கிராமங்களின் ஆதரவை நிறையவே பெற்று வருவதாலும், மக்களிடையே செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், உள்ளாட்சி தேர்தலுக்கு முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி தனித்து நின்றால், தன் கட்சியின் செல்வாக்கு, பலத்தினை அறியலாம் என்று கமல் நிறையவே நம்புகிறாராம்.
சட்டசபை தேர்தல்
மொத்தத்தில் கமலின் உள்ளத்தில் உள்ளது உண்மையில் யாருக்கும் தெரியவில்லை, புரியவில்லை. ஆனால் லோக்சபா தேர்தலை விட சட்டசபைத் தேர்தலில்தான் அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.