விஷம் கக்கும் மதவாத சக்திகள்.. நேர்மை எனும் நெருப்பில் பொசுங்கிப் போவது உறுதி.. மநீம ஆவேசம்!
மக்கள் நீதி மய்யம் என்கிற கதிரவனை உள்ளங்கைக்குள் மூடி விடலாம் என நினைத்தால் நேர்மை எனும் நெருப்பில் பொசுங்கிப் போவது உறுதி என மநீம பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நேர்மையோடு மோத திராணியற்ற சக்திகள் மனரீதியாக நெருக்கடி கொடுக்க முனைந்து அதிலும் தோல்வியை தழுவியதால் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளன என அக்கட்சியின் தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளித்த நிலையில், மநீம காங்கிரஸ் கட்சியுடன் இணைய இருப்பதாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. இது ஹேக்கர்கள் செய்த வேலை என மநீம அறிவித்தது.
இதுகுறித்து அறிக்கை விடுத்துள்ள மநீம தொழிலாளர் அணி செயலாளர் பொன்னுசாமி, வெறுப்பு அரசியலின் சூத்திரதாரிகள் மக்கள் நீதி மய்யம் என்கிற கதிரவனை உள்ளங்கைக்குள் மூடி விடலாம் என்கிற நினைப்பில் தரம் தாழ்ந்து செயல்பட நினைத்தால் நேர்மை எனும் நெருப்பில் அவர்கள் பொசுங்கிப் போவது உறுதியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை எனத் தெரிவித்துள்ளார்.
ஜன.,30ல் காங்கிரசுடன் இணைப்பு? மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் திடீர் ‛ஹேக்'!பரபர
மக்கள் நீதி மய்யம்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கினார். தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், பின்னடைவைச் சந்தித்தது. அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசனும், 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனினும், அக்கட்சியினர் தொடர்ந்து, களத்திலும் இணையத்திலும் இயங்கி வருகின்றனர்.
திமுக + காங்கிரஸ் உடன் நெருக்கம்
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனது ஆதரவை திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வழங்கியுள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கமல்ஹாசன் பங்கேற்றிருந்தார். இதனால், தேசிய அளவில் காங்கிரஸ் உடனும், மாநில அளவில் திமுக உடனும் கமல்ஹாசன் நெருக்கமாக உள்ளதாக கூறப்பட்டது.
கொளுத்திப்போட்ட ஹேக்கர்கள்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,"மக்கள் நீதி மய்யம் 2024 லோக்சபா தேர்தலுக்கான பெரிய அறிவிப்பு" என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட உள்ளது என்றும் முறையான இணைப்பு 30 ஜனவரி 2023 அன்று நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அக்கட்சியின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்கப்போவதாக, இணையதளத்தை முடக்கி ஹேக்கர்கள் விஷமம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில்
இந்நிலையில் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்ததில் இருந்தே அதனை பொறுக்கமாட்டாத மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில் தமிழ்நாட்டை அபகரிக்க நினைக்கும் வீணர்களின் பல்வேறு விதமான விஷக்கருத்துக்கள் பொதுவெளிகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தன.
விஷமிகள்
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு சென்று, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கி அதில் கட்சியின் அறிக்கை போன்று தவறான செய்தியை விஷமிகள் பதிவு செய்துள்ளதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாகக் கண்டிக்கிறது.
கதிரவனை உள்ளங்கைக்குள் மூட முடியாது
கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நேர்மையோடு மோத திராணியற்ற சக்திகள் மனரீதியாக நெருக்கடி கொடுக்க முனைந்து அதிலும் தோல்வியை தழுவியதால் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளன. வெறுப்பு அரசியலின் சூத்திரதாரிகள் மக்கள் நீதி மய்யம் என்கிற கதிரவனை உள்ளங்கைக்குள் மூடி விடலாம் என்கிற நினைப்பில் தரம் தாழ்ந்து செயல்பட நினைத்தால் நேர்மை எனும் நெருப்பில் அவர்கள் பொசுங்கிப் போவது உறுதியாகும் என்பது மறுக்க முடியாத உண்மை" எனத் தெரிவித்துள்ளார்.