கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் மிதமான மழை - வட மாவட்டங்களில் வறண்ட வானிலை
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக கொட்டித்தீர்த்த கனமழையால் அணைகள் நிரம்பியுள்ளன. குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. மக்களின் இயல்புவாழ்க்கை பல பகுதிகளில் முடங்கியுள்ளது. வெள்ளம் படிப்படியாக குறையத் தொடங்கினாலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் வானமாதேவியில் அதிகபட்சமாக 6 செமீ மழை பதிவாகியுள்ளது. ஆற்காடு, மரக்காணத்தில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவக் காற்றின் காரணமாக இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் வருகிற 18ஆம் தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications