மோடி தமிழகத்தில் போட்டியிட்டால்… வச்சு செய்வார்களா எதிர்க்கட்சிகள்? ஒரு அலசல்
Recommended Video
சென்னை: பிரதமர் மோடியின் வருகையால், மற்ற மாநிலங்களை விட தமிழகம் இம்முறை பரபரப்பாகி உள்ளது. அதிலும் மோடி தமிழகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நிச்சயம் களம் காணுவார் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாவலனா(அதாங்க மோடி... இல்லை பப்புவா(அதாங்க ராகுல்) என்று யார் அரியணையை கைப்பற்றுவார்கள் என்று தெரியவில்லை.
ஆனால்... தேர்தல் கணக்கீடுகளும் தொகுதிகளுக்கான ஆலோசனைகளும் வேம் எடுக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளுக்கான பரபரப்புக்கு கேட்கவே வேண்டாம்.
2 தொகுதிகளில் போட்டியா?
அதில் தற்போதைக்கு நட்சத்திர வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் வழக்கம் போல மோடியே தான். கடந்த முறை 2 தொகுதிகளில் களம் கண்ட அவர் இம்முறையும் அதே பாணியில் களம் காண முடிவு செய்துள்ளார் எனலாம். ஆனால்... அதில் ஒரு தொகுதி கோ பேக் மோடியை இன்றும் மையப்படுத்தி பாஜகவுக்கு போராட்டக்களமாகி வரும் தமிழகம்தான்.
முழுவீச்சில் பாஜக
இந்த முறை காலூன்றி விடவேண்டும் என்ற உத்வேகத்தில் பாஜக முழு வீச்சில் இறங்கி உள்ளது. அதற்கான செயல்திட்டங்களை அக்கட்சி வகுத்து வருகிறது. அதில் மாஸ்ட்ர் பிளானாக கருதப்படுவது... தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவது.
வாக்குகள் கிடைக்குமா?
அதன் வழியாக வட இந்தியாவில் அரங்கேறி வரும் மோடி எதிர்ப்பை திசை திருப்புவது... மேலும் தமிழகத்தில் இன்றும் நோட்டாவுக்கு கீழே உள்ள வாக்கு வங்கியை அதிகப்படுத்துவது என்ற அம்சங்களும் அடங்கி உள்ளன. மோடி போட்டியிடுவதற்காகவே ... முத்தான 3 தொகுதிகளை அடையாளப்படுத்தி வைத்திருப்பதாக பாஜகவினர் கிசுகிசுக்கின்றனர். அவை கோவை, திருப்பூர், கக்னியாகுமரி. காரணம் இந்த பகுதிகளிலும் பாஜகவுக்கு என்று ஓரளவு வாக்குவங்கி உள்ளதாக அவர்கள் கூறுவது தான்.
தொகுதிகளின் பல்ஸ் எப்படி?
கன்னியாகுமரி தொகுதியின் தற்போதைய எம்பி.. பொன்.ராதாகிருஷ்ணன். இவர் தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளார். மோடி எதிர்ப்பு என்று தமிழக மக்கள் நினைக்கும் போதெல்லாம் அனைவர் கண்முன்னே வந்து செல்பவர். தமிழகத்தின் ஒரேயொரு பாஜக எம்பி. மோடிக்காக முதல் ஆளாக தொகுதியை விட்டு தருவார் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது என்பதால் மோடி போட்டியிட்டால் படுத்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்று அரசியல் பழமொழிக்கு நாம் உடனடியாக டிக் அடிக்கலாம்.
வடமாநில மக்கள்
அதற்கு அடுத்து... திருப்பூர் தொகுதி. பனியன் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டமானது ஒரு கலவையான மாவட்டமாகும். அந்த மாவட்டத்தில் தற்போது பாரம்பரிய, பூர்வீகமான மக்கள் உள்ளனரா என்பதில் லேசாக சந்தேம் எழுகிறது. காரணம்.. தற்போது மண்ணின் மைந்தர்களின் எண்ணிக்கையை விட வடமாநிலத்தவரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதுதான்.
அதிமுக வசம்
பல மொழி பேசும் நகரமாக மாறிவிட்டிருக்க திருப்பூர் தொகுதியின் தற்போதைய எம்பி சத்யபாமா... ஆனால்... இங்குதான் லேசாக இடிக்கிறது. அவர் அதிமுக எம்பி. அதாவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதிமுக தம் வசம் பிடித்து வைத்திருக்கும் இந்த தொகுதியின் தற்போதைய தேர்தல் களம் வேறு மாதிரியாகவே உள்ளது.
சம்மதம் தருவார்களா?
ஒருவேளை மோடி போட்டியிடுகிறார் என்றே வைத்துக் கொண்டால் எந்த அளவுக்கு அதிமுக ஒத்துழைக்கும் என்பது ஆக சிறந்த கேள்வியாக பார்க்கப் படுகிறது. அப்படியே பாஜகவுக்கு அந்த தொகுதியை கொடுக்க அதிமுக முக்கிய தலைவர்கள் சம்மதிப்பார்களா என்பது அடுத்த சவால். பின்னர் தேர்தல் பிரச்சாரம்... கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு என அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இறுதியாக... கோவை லோக்சபா தொகுதி.. இதுவும் திருப்பூர் போன்ற பாணியை கொண்ட தொகுதி. ஒரு காலத்தில் தொழிலாளர்களின் ஏகோபித்த ஆதரவு கொண்டதால் காம்ரேடுகளின் செல்லப்பிள்ளையாக இருந்த தொகுதி. இந்த தொகுதியும் தற்போது அதிமுக வசம்.
செல்வாக்கு உள்ளது
கொங்கு மண்டலத்தின் உயிர்நாடியான இந்த லோக்சபா தொகுதியானது அதிமுகவின் முக்கிய வெற்றி தொகுதியாக அக்கட்சியினால் கணிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளதே என்றே கூறலாம். கடந்த காலங்களில் கோவை தொகுதியில் பாஜக எம்பியாக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விட்டுக்கொடுப்பார்களா?
இந்த தொகுதியை அதிமுக விட்டுக் கொடுப்பார்களா என்பது இமாலய சந்தேகம்(ஒரு வேளை பாஜகவுடன் கூட்டணி அமைந்து... அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்து... அதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் வேண்டுமானால் முடிவாகலாம்) இது தவிர சிட்டிங் எம்பி தொகுதியை அதிமுக விட்டுத்தராது என்று கூறலாம்.
காத்திருக்கும் சவால்
3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தாலும்... பிரச்சாரம் எப்படி இருக்கும் என்பது அடுத்த சவால். ஏனென்றால் பாஜகவுக்கு தமிழகத்தில் திராவிட கட்சிகளை போன்று ஆற்றல்வாய்ந்த பேச்சாளர்கள் இல்லாதது ஒரு குறை. பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்னபிற தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது கணிக்கமுடியாத ஒன்று.
பாஜகவின் தொகுதி
ஆக மொத்தத்தில் மோடிக்கு இப்போதைய கணக்கின்படி... பாஜகவின் சிட்டிங் தொகுதியான கன்னியாகுமரியே போதுமானதாக இருக்கும் என்பது அரசியல் திறனாய்வாளர்களின் கருத்து. சிட்டிங் எம்பி தொகுதி என்பதால்.. எந்த குடைச்சலும் இருக்காது.. சுலபமான வெற்றியை... ஈட்டிவிடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பேச்சுவார்த்தை,ஒதுக்கீடு
இவை எல்லாம்... பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து... அதன் பிறகு தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை... அதில் நிலவும் உரசல்களை இதை தாண்டி தான் நிகழும். அதையடுத்து, எதிர்க்கட்சிகளின் பிரச்சார வியூகங்களும் நிச்சயமாக மாறும்... காட்சிகள் வேகமெடுக்கும்.
அரசியல் பாலபாடம்
அதுவரை.. கல்யாணம் ஆகவேவில்லை.. அதற்குள் பிள்ளைக்கு பேர் வைக்க புறப்பட்ட கதையாக இருக்கிறதே என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். எது எப்படியிருந்தாலும்.. சில விவகாரங்களை பேசியே காணாமல் போக்கிட வகையில் செய்ய வேண்டும்.. சில விவகாரங்களை கண்டு கொள்ளாமல் இருந்தாலே காணாமல் போய்விடும்.. இதுதான் அரசியலின் பாலபாடம். இதில் எந்த பாடத்தை முடிவு செய்ய வேண்டும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.